Thursday, January 20, 2011

ஒரு நாள் இன்பம்

  உதயணன்
 












செங்கதிர்கள் இருளின் வயற்றைப் பிளந்தெறிந்ததால் அடிவானம் தோய்ந்து செந்நிறமாகக் காட்சி தந்தது.

 மணி ஆறரை!

 கந்தசாமி புரண்டு படுத்தான். அவன் கொஞ்சம் முன்னதாகவே எழுந்துவிடுவதால் அவனுடைய வீட்டில் ஏதாவது புதுமையாக நடந்துவிடப் போகிறதா? தலையைத் தூக்கி ஒரு நோட்டம் விட்டான். அடுப்புப் புகைந்து கொண்டிருந்தது, கோப்பியாக்கும்.

 தங்கம் வாசற்படியில் உட்கார்ந்து தங்களது மூன்றாவது 'படைப்பை' மடியில் வைத்து தலைவாரிக் கொண்டிருந்தாள். கழுதை கெட்ட கேட்டுக்கு குஞ்சம் ஒன்றுதான் குறைச்சல்.

 கந்தசாமி வலது பக்கமாகத் திரும்பிப்படுத்தான். கன்னம் 'சில்'லென்று இருந்தது, தலையணை ஈரம்! ஆமாம் இனி அவன் வடிப்பதற்குக் கண்ணீரே இல்லை, எல்லாவற்றையும் வடித்துவிட்டான். சாட்சி நனைந்துபோன அந்தத் தலையணை. இனி அவன் வணங்குவதற்குத் தெய்வமே இல்லை, எல்லா 'தெய்வங்களையும் வணங்கிவிட்டான். சான்று, நைந்துபோன அவனுடைய உள்ளம். இனி அவன் சிந்தித்துப் பார்க்க ஒரு வழியுமே இல்லை. எல்லா வழிகளிலும் சிந்தனையைச் செலுத்திப் பார்த்துவிட்டான். ஆதாரம், தனது சிந்தனா சக்தியை பற்றி அவனுக்கு இருந்த நல்லெண்ணம்.

 அவனுடைய ஐந்தாவது சிருஷ;டி தவிழ்ந்து வந்து அவனுடைய கால் கட்டை விரலைக் கடித்து, முளைத்து வரும் பல்லின் பலத்தைக் காட்டியது. கந்தசாமி குழந்தையைத் தூக்கி தனது பக்கத்தில் படுக்க வைத்தான். பாயின் முரட்டுப்புல் குழந்தையின் முதுகுப் புண்ணை உராஞ்சியதால் அது வீறிட்டுக் கத்தியது. குழந்தையைத் தூக்கி தன் நெஞ்சில் உட்கார வைத்துவிட்டு சிந்தித்தான். நல்ல வேளை, சிந்திப்பதற்கு பணம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லாமல் இருந்ததே.

 குழந்தையின் உடல் எல்லாம் கிரந்திப் புண். பிறந்த ஊராக இருந்தால் அளவெட்டிப் பரியார் இருக்கவே இருக்கிறார். இங்கு கொழும்பில்? ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக அவனுக்கு நேரமில்லை. நேரமிருந்தாலும் மருந்துக்கும் பத்தியத்திற்கும் சத்துள்ள உணவிற்கும் மற்றது இல்லை – பணம்!

 'வேலைக்கு போகவில்லையா? மணி ஏழாகி விட்டது' என்று சொல்லிக் கொண்டுவந்த தங்கம் கோப்பியை அவனுக்கு அருகில் வைத்தாள்.

 'போக வேண்டியதுதான்' என்று எழுந்த கந்தசாமி அவளைப் பார்த்துச் சிரித்தான். அவன் சிரித்தது உள்ளம் பொங்கிய களிப்பினால் அல்ல – வெள்ளம் தலைக்குமேல் போய்விட்டதாம் இனி அழுதென்ன சிரித்தென்ன என்ற நினைவினால். அந்தச் சிரிப்பு அவனையும் அவளையும் ஏமாற்றிவிட்டு தன்னுயிரை மாய்த்துக் கொண்டது.

 கந்தசாமி காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வந்து வெற்றி முரசு கொட்டும் மூன்றாவது வாரமாக அந்தக் காற்சட்டையை அணிந்து கொண்டான்.

 'விரைவில் இன்னொரு காற்சட்டை தைத்துக் கொள்ள வேண்டும்' என்று வழக்கம்போல அன்றும் எண்ணிக் கொண்டான். அந்த எண்ணத்தை அடித்துப் புரட்டி விழுத்தி விட்டு பாய்ந்தது ஒரு பெருமூச்சு.

 வேலைக்கு போகிறவராச்சே என்று சதம் சதமாகப் பொறுக்கி தங்கம் வாங்கி வைத்திருந்த மூன்று தோசைகளையும் பிள்ளை பரிவாரத்திற்கு பகிர்ந்தளித்து விட்டுப் பிதாவாகப் புறப்பட்டான் கந்தசாமி.

 தாழ்வாரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த, யுத்த காலத்தில் பலத்த பந்தோபஸ்துடன் ஈழத்திரு நாட்டிற்கு வந்து சேர்ந்த வாகனத்தை – சைக்கிளை, வெளியே இழுத்து அதன் முதுகை – ஆசனத்தை சுற்றி ஒரு 'கிளிப்'பைக் கொழுவி விட்டான், காற்சட்டை சைக்கிளில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பது ஊரறிந்த காரணம், அவன் மட்டிலும் தெரிந்த சில பல காரணங்களும் இருக்கலாம்.

 தங்கம் வாசலில் வந்து நின்றாள்.

 கந்தசாமிக்கு விசயம் விளங்கிவிட்டது.

 'கணவன்மார்;களே! நீங்கள் வெளியே புறப்படும் சமயமாக வாசலில் குறுக்கே வந்து நின்று உங்கள் மனைவியர் ஒரு புன்னயையை வலுக்கட்டாயமாக உங்கள் பால் விட்டெறிந்தால் அடுத்து வர இருக்கும் ஒரு பேராபத்திற்கு முகம் கொடுக்கத் தயாராகுங்கள். அவர்களைத் தொட்டுத் தாலி கட்டிய அந்தப் பழைய கணக்கைக் கூட்டிப் பார்த்து ஆறுதலடையுங்கள். மிஞ்சி மிஞ்சிப் போனாலும் அவர்களுடைய கோரிக்கை ஒரு புடவையாகவோ ஒரு புன்னகையாகவோதான் இருக்கும். 'ஆகட்டும்' என்று சொல்லி வைத்தால் போதும் வாக்கைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. கண்ணீர்க் குண்டுகளுக்குப் பயந்து உங்கள் பலவீனத்தை வெளிப்படுத்தாமல் தைரியமாக நடந்துவிட்டால் உங்கள் வர்க்கத்தினரின் மானத்தைக் காத்த பெருமையைப் பெறவீர்கள்.'

 'தங்கம்..........!' கந்தசாமி சிரமப்பட்டு ஒரு சிரிப்பை இழுத்துவந்து தன் முகத்தில் மேயவிட்டான். 'எங்கள் நிலைதான் உனக்குத் தெரியுமே. கடன்காரரால் பகல் நேரத்தில் வீPட்டுக்கு வரவே முடியவில்லை. பொறுத்ததோடு இன்னும் ஒருமாதம் பொறுத்துக் கொண்டால் நீ கேட்ட சேலையை வாங்கி விடலாம்.'

 தங்கத்தின் முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியின் பிரதிபலிப்பும் தெரியவில்லை, பெண்ணல்லவா?

 'அதுவும்போக', கந்தசாமியே தொடர்ந்தான். 'மற்றவர்கள், வசதியுள்ளவர்கள் ஆடம்பரமாகத்தான் வாழ்வார்கள். அதைப் பார்த்து நாமும் ஆசைப்பட்டால் முடியுமா? பிள்ளைகளுக்கே உருப்படியான சட்டை எதுவும் இல்லை. உன்னை இந்தக் கோலத்தில் காண்பதில் எனக்கு மட்டும் திருப்தியா, என்ன? என்னவோ கெட்டகாலம் சேலையை அடுத்த மாதம் வாங்கிக் கொள்ளலாம். 'ம்' என்று சொல்லு நான் நிம்மதியாக வேலைக்குப் போய் வரலாம்.' கந்தசாமி நிறுத்தினான்.

 'உங்களுக்கு எப்பொழுதுதான் இந்தப் பஞ்சப்பாடு தொலையைப் போகிறதோ தெரியாது. வருஷம் பன்னிரண்டுமாதம் உங்களுக்குத்தான் கொள்ளையும் கோதாரியும். இனிமேல் உங்களை ஒன்றும் கேட்காமல் தெருவால் போகிறவன் வருகிறவனை சேலை வாங்கித் தரச் சொல்லிக் கேட்கட்டுமா?'

 'நீயுமா தங்கம்?' என்றான், 'சீஷர்' பாணியில் அவனுடைய முகத்தில் பரிதாபம் இடம்பிடிக்க அகத்தில் வேதனை குடி புகுந்தது.

 'நீயுமா நிலைமை தெரிந்த நீயுமா என்னை வதைக்கிறாய்?' என்றவன் தன் கண்களில் ஜென்மம் பெறும் முத்துகளை மனைவி கவனித்துவிடக் கூடாது என்று சைக்கிளில் ஏறி வேகமாக மிதித்தான்.

 'அவளும் தான் எத்தனை காலத்திற்குப் பொறுப்பாள்? என்னுடைய தங்கம் தங்கமானவள்.'

 கந்தசாமியை – கந்தசாமியையா – தாங்க முடியாமல் அந்தப் பழைய சைக்கிள் நெழிந்தது. பின் சில்லு ஒன்பதாவது கம்பியையும் முறித்து பின்னரும் சாமகீதம் பணிவுடன் பாடலுற்றது. கந்தசாமி திருவுளம் இரங்கி சைக்கிளை விட்டு இறங்கி அதைத் தள்ளிக் கொண்டு நடந்தான்.

 கந்தசாமிக்கு முன்;னால் போய்க்கொண்டிருந்த ஒருவன் தனது காற்சட்டைப் பையில் கையைவிட்டு கைக்குட்டையை வெளியே எடுத்தான். அதோடு ஒரு மடிந்த காகிதமும் சேர்ந்து வந்து தெருவில் விழுந்தது.

 'ஐயா..........!' என்று குரல் கொடுத்த படி கந்தசாமி அதை எடுத்து விரித்தான். அது ஒரு நூறு ரூபாய் நோட்டு. அதற்கிடையில் உரியவன் தெரு மூலையில் திரும்பிவிடவே கந்தசாமி நோட்டை ஆகாய வெளியில் பிடித்துப் பார்த்தான். சந்தேகமில்லை. அது ஒரு கள்ள நோட்டு!

 நேர்மை, வேண்டாமென்றது.

 வறுமை, வேண்டுமென்றது.

 உள்ளத்தில் ஒரு மின்னல்!

 '.......... வருஷம் பன்னிரண்டு மாதமும் உங்களக்குத்தான் கொள்ளையும் கோதாரியும்.......... வருஷம் பன்னிரண்டு மாதமும் உங்களுக்குத்தான் கொள்ளையும் கோதாரியும்...... வருஷம் பன்......'

 கந்தசாமி நடந்தனான். எதிரே ஒரு பொலிஸ்காரன் வந்தான். கந்தசாமியை ஏதோ ஒன்று எச்சரிக்கை செய்தது. அந்தக் கள்ளநோட்டை எட்டாக மடித்து சட்டைப்பை அடியில் போட்டுக் கொண்டு குனிந்தபடி நடந்தான். பொலீஸ்காரன் போய்விட்டான்.
 கந்தசாமி மேலும் நடந்தான். எதிரே அவனுக்கு கடன் கொடுத்த ஒருவன் வந்தான். கந்தசாமி பயந்துபோய்;, சைக்கிளை தெருவோரத்தில் நிறுத்திவிட்டு ஒரு சந்தில் நுளைந்து மறைந்து கொண்டான்.

 பொலீஸ்காரனைக் கண்டு கள்ள நோட்டை மறைந்த கந்தசாமி கடன்காரனைக் கண்டு தன்னையே மறைத்துக் கொண்டான். ஏன், கந்தசாமியும் அந்தச் சமுதாயத்தில் ஒரு 'ஒரு கள்ள நோட்டு'த் தானா? அவனைப் போன்றோர் மனிதரோடு மனிதனாக வெளிப்படையாக வாழவே முடியாதா?

 இங்கு கந்தசாமியைப் பற்றியும் ஒரு வார்த்தை குறிப்பிட வேண்டும். அவன் நடுத்தர வகுப்பில் வந்து விடிந்தவன் - ஒரு குமாஸ்தா!

 வழக்கம் போல அலுவலகத்தில் ஒரு கட்டுப்பணத்தையும் அதற்குரிய பத்திரங்களையும் ஒப்புக் கொண்டான் கந்தசாமி. அந்தப் பதினாயிரம் ரூபாவையும் வங்கியில் கொண்டுபோய் கட்டிவிட்டு வர வேண்டும். அவனுடைய உள்ளத்தில் ஒரு மெல்லிய கீறல் விழுந்து துடித்தது. அவனுக்குச் சிந்திக்க நேரமில்லை. மனைவியிடமும் மற்றவர்களிடமும் மதிப்பாக வாழ வேண்டுமென்றால் பொய்யும் புரட்டும் செய்யத்தான் வேண்டுமென்று எண்ணியதோடு துணியவும் செய்தான்.

 அந்தக் கள்ள நோட்டை எடுத்து அதில் அடையாளமாக ஒரு சிலுவைக் குறியைப் போட்டு அதை நோட்டுக் கட்டுக்கு நடுவில் திணித்தான். ஒரு நல்ல நோட்டை எடுத்து தாம் வைத்துக் கொண்டு நடந்தான்.

 ஐயோ, அந்த அரைமணி நேரமாக அவனுடைய மனம் துடித்த துடிப்பு! ஏதாவது விபரீதமாக நடந்து விட்டால் நாளைக்கு தங்கத்தின் கதி....? பிள்ளைகளின் நிலை...? 'தங்கத்தின் மீது ஆணை! இனிமேல் இந்த வேலையை நான் செய்யவே மாட்டேன்' என்று எண்ணியவனாய் வங்கிப் படிகளில் இறங்கினான் - கையில் நல்ல நோட்டுடன்!

 அந்த ஒருநாளாவது அவனுடைய குடும்பத்தை இன்பமாக இருக்க வைப்போம் என்ற நினைவு போலும், கடைத்தெருவில் இறங்கினான் கந்தசாமி.

 எல்லோருக்கும் வரிசையாக உடுப்பு வாங்கினான். நல்ல உணவுப் பொருட்களை தேடி வாங்கினான். தங்கத்திற்கு ஒரு 'கிலிட்' சங்கிலி. தனக்கொரு ஜப்பான் பேனா. மூத்ததுக்கொரு றிப்பன். இளையதிற்கு ஒரு கிலுகிலுப்பை - இன்னும் எத்தனையோ! கடைக்காரனுக்கு ஒன்றேகால் ரூபா கடன் வேறு வைத்துவிட்டுத் திரும்பினான் கந்தசாமி.

 அன்றிரவு கந்தசாமி சாவதானமாக இருந்து கூப்பன் கடைக்கு இவ்வளவு, காய்கறி கடைக்கு இவ்வளவு என்று எதிர்வரும் சம்பளப் பணத்திற்கு பங்கீட்டுக் கணக்கு போட்டுக் கொண்டிருந்தான். அன்றைக்கு குளித்து முழுகி வயிறார உண்டதால் பிள்ளைகள் எல்லோரும் உறங்கிவிட்டனர்.

 தங்கம் வெற்றிலையை மடித்து கந்தசாமியின் வாயில் வைத்துவிட்டுச் சிரித்தாள். பல நாட்களுக்குப் பிறகு அவளுடைய விழிகள் அவனை –

 'ஏன் சிரிக்கிறாய்?' என்று அவளுடைய கன்னத்தைக் கிள்ளப் போனான் கந்தசாமி.

 'ஆமாம். இன்றைக்கு இவ்வளவு பணம் ஏது?' என்று தங்கம் கேட்டாள்.

 கந்தசாமி அவளிடம் பொய் சொல்லவில்லை. உண்மையையும் சொல்லிவிடவில்லை. சிரித்து மழுப்பினான். பேச்சை வேறு துறைக்கு மாற்றினான்.

 'இன்றைக்கு நீ மிகவும் அழகாக இருக்கிறாய்' என்று கொஞ்சினான்.

 'போங்க....!' என்று அவள் கடைக்கண்ணால் அவனை நோக்கினாள். அவன் அவளை இழுத்து தன் மடியில் படுக்க வைத்தான். அவள் நெளிந்தாள்.

 விடிந்தது.

 கந்தசாமி படுக்கையை விட்டு எழவில்லை. எழமுடியவில்லை. அவனுக்கு நல்ல காய்ச்சல். முதல் நாள் வெயிலில் அலைந்ததன் விளைவு. தங்கம் குடி நீர் போட்டுக் கொடுத்தாள். அதைக் குடித்துவிட்டு, வீடு தேடி வந்த கடன்காரனின் வசைகளை வாங்கிக்கொண்டு கிடந்தான்.

 மூன்றாம் நாள் காலை அவனுடைய வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து அவன் வேலை பார்த்த கடை முதலாளியே இறங்கி வந்தார்.

 'எப்படியப்பா கந்தசாமி சுகம்?'

 'இப்போ பரவாயில்லை சார்' என்று பயபக்தியுடன் பதில் தந்தான் கந்தசாமி.

 'அவசரப்படாமல் நன்றாகச் சுகம் வந்ததும் வேலைக்கு வா. இது இந்த மாதச் சம்பளம். உனக்கு நெருக்கடியாக இருக்குமென்று இருபத்தைந்து ரூபா மேலதிகமாக வைத்திருக்கிறேன். அதை அடுத்த மாதச் சம்பளத்தில் பிடித்துக்கொள்ளலாம்' என்று சொல்லி ஒரு உறையை தங்கத்திடம் கொடுத்தார்.

 முதலாளி போய்விட்டார்.

 கந்தசாமி உறையை வாங்கி ஆவலோடு பிரித்து, உள்ளே இருந்த ஒரே ஒரு நோட்டை வெளியே எடுத்தான். அதன் .... வலது பக்க மேல் மூலையில் .... ஒரு சிலுவை அடையாளம் இருந்தது.

 ஒரு நூறு ரூபா நோட்டு!

No comments:

Post a Comment