Thursday, November 29, 2012

அசோகன் கொழும்பில இருக்கிறான்...

தேவமுகுந்தன்









வீடு குழம்பிப்போயிருந்தது. முதலாவது அறையை ஒதுக்கி சேந்தனின் குடும்பத்திற்குக் கொடுத்ததில்
, இவனது குடும்பத்தவர் எல்லோரும் இரண்டாவது அறையையே பயன்படுத்த வேண்டியிருந்தது.
இப்போது இரண்டாவது அறையிலிருக்கும் சாமான்களை எடுத்து முதலாவது அறைக்குள் அடுக்க வேண்டியுள்ளது. இனி இரண்டாவது அறையைத் துப்பரவாக்க வேண்டும்.

குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய முதுகு உளைந்தது. வியர்த்துக் கொட்டியது. அவர்களை ஊருக்கு அனுப்ப அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து இரத்மலானை விமான நிலைத்திற்குச் சென்றிருந்தான். இப்போது நித்திரை தூக்கியடிக்கின்றது. வருடாந்தம் சுமார் பத்துப் பன்னிரண்டுதரம் இப்படிப்பட்ட வேலைவந்து சேர்ந்து விடுகின்றன. மகனும் மகளும் பாடசாலைகளிலிருந்து இரண்டு மணிக்குப் பின்புதான் வருவார்கள். மனைவி வர ஐந்து மணியாகும். இந்த வேலைகளை முடித்து பத்தரைக்கு முன்பு அலுவலகத்துக்கு போய்ச் சேர்ந்தால் 'ஷோர்ட் லீ'விலை சமாளிக்கலாம். இல்லாவிட்டால் அரைநாள் லீவு போடவேண்டியிருக்கும். லீவுகள் முடிந்து கொண்டிருக்கின்றன.

வந்தவர்களை விமான நிலையத்திலிருந்து கூட்டிவர ஒருநாளும், அவர்களுடன் வங்கி, பொலிஸ் நிலையம், கடைகள் என்று திரிய இன்னொரு நாளுமாய் இரண்டு நாட்கள் 'லீ;'வெடுத்தாயிற்று. இன்னும் இரண்டு வாரத்தால் அவர்கள் திரும்பி வரும்போது, கூட்டித்திரியவும் கட்டுநாயக்காவுக்குப் போகவுமாய்; இருநாட்கள் லீவு எடுக்க வேண்டி வரலாம்.
...

அவனது வீடு ஊரிலோ வெளிநாடுகளிலோ இல்லாமல் இடையில் கொழும்பில் இருப்பதனாற்தான் இந்தச் சிக்கல். இரண்டு அறைகளையும் கூடத்தையும் சமையல் அறையையும் கொண்ட இந்த வாடகை வீட்டில் வேறு ஆட்கள் தங்குவதென்பது சிரமம்தான். பிள்ளைகளின் படிப்புக் குழம்பும். இவனது எழுத்து வேலைகள் வாசிப்புக்கள் குழம்பிப் போகும். தனிப்பட்ட சுதந்திரம் தொலைத்தவர்களாக இவர்கள் நான்குபேரும் அந்த நாட்களில் உணர்வார்கள்.

வருபவர்களை பொலீஸில் பதிவு செய்வதற்காய் அவர்களையும் வீட்டுச் சொந்தக்கார பெரேராக் கிழவனையும் கூட்டிக் கொண்டு பொலீஸ் நிலையத்திற்கு அலைய வேண்டும். பெரேராக் கிழவன் முகம் சுழிப்பான், புறுபுறுப்பான். அந்த மாத வாடகையைச் செலுத்தும் போது இரண்டாயிரமோ மூவாயிரமோ கூடுதாலாக அவனுக்கு கொடுக்க வேண்டியிருக்கும். அடுத்த மாதப் பட்டியல்கள், நீர் அளவீட்டுமானியும் மின்சார அளவீட்டுமானியும் சிக்கன எல்லைகளைத் தாண்டிச் சுற்றியிருப்பதைத் சுட்டிக் காட்டும். தொலைபேசிக் கட்டணம் உயர்திருக்கும். அடுத்த மாதச் செலவுகள் கையைக்கடிக்கும்.

இவற்றை தவிர்க்கவே அசோகன் முயற்சிக்கிறான். ஆனால் தவிர்க்க முடியாமல் தடுமாறுகிறான். வெளிநாடுகளில் இருக்கும் இவனது-மனைவியினது நெருங்கிய உறவினர்கள்-சிறுவயதில் ஒன்றாய்ப் படித்த- விளையாடிய நண்பர்கள் எந்தவொரு தொடர்புமற்று இருப்பார்கள். இலங்கைக்கு வருவதற்கு ஓரிரு வாரத்திற்கு முன்பு திடீரென தொலைபேசியில் அன்பொழுகத் கதைக்கத் தொடங்கி பின்னர் தாங்கள் இலங்கைக்கு வரும் தினம், விமானத்தின் இலக்கம் என்பவற்றைக் கொடுத்து கட்டுநாயக்காவில் வந்து தங்களைக் கூப்பிடும்படி கூறுவார்கள்.
...

மகனின் புத்தக மேசையை இழுத்து வந்து முதலாவது அறைக்குள் வைத்தவன், புத்தகங்களை அள்ளிக் கொண்டுவந்து அதில் குவித்தான். இனி மகளின் மேசையை இழுத்து வரவேண்டும். பாடசாலைகளில் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புக்களில் ஆசிரியர்கள்;, பிள்ளைகள் வீட்டுவேலைகளை ஒழுங்காகச் செய்து வருவதில்லை- வீட்டில் படித்துக் கொண்டு வருவதில்லை என இவனிடம் முறைப்பாடுகள் செய்வார்கள். இவனால் பிள்ளைகளைக் கண்டிக்க முடிவதில்லை. தனது வீட்டில் படிக்கும் சூழல்; இல்லையென்பதை ஆசிரியர்களிடம் சொல்ல இவனுக்கு வெட்கமாக இருக்கின்றது.

வருபவர்கள், தங்களுடன் இவர்கள் முழுநேரமும் இருந்து கதைக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் வீட்டில் இருக்கும்போது, மகனோ மகளோ தங்கள் வீட்டுப் பாடங்களைச் செய்வதற்காகப் புத்தகம் கொப்பிகளை எடுத்தால், 'இவரின் மகனுக்கு பெரிய லெவல் எங்களோடை சேருறான் இல்லை. எந்த நேரமும் புத்தகங்களோடை இருக்கிறான்.' என்றோ 'மகளுக்கு தான்தான் பெரிய படிப்புப் படிக்கிறா என்ற நினைப்பு, எங்களைக் கணக்கெடுக்கிறா இல்லை' என்றோ ஊரிலுள்ள உறவினர்களுக்கு சொல்வார்கள்.

'இஞ்சத்தைப் படிப்பு 'ஸ்ராண்டட்' காணாது. அங்கை என்றால்.............' என்று தங்கள் பெருமைகளை வீட்டுப்பாடம் செய்ய கொப்பியையும் பேனாவையும் எடுக்கும் பிள்ளைகளிடம் விளக்கத் தொடங்குவார்கள். பிள்ளைகள் கொப்பி, புத்தகங்களை மூடிவைத்து விட்டு கொட்டாவி விட்டபடி அவர்களின் அலட்டல்களைக் கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்க இவனுக்குத் தர்ம சங்கடமாயிருக்கும்.
...

சாப்பாட்டு மீதிகள், சிகரெட் அடிக்கட்டைகள், ரொபி மேலுறைகள்... என குப்பைகள் அறையினுள்ளே பரவியிருந்தன. அடிக்கடி கனடா நாட்டின் சுத்தத்தையும் அங்குள்ள மக்களின் பழக்கவழக்கங்களையும் பெருமைபொங்கக் கதைக்கும் அவர்களுக்கு கழிவுப் பொருட்களை குப்பைக் கூடைக்குள் இடவேண்டுமென்ற அடிப்படைப் பண்பு கூட இல்லாதது இவனுக்கு ஆச்சரியமாயுள்ளது.

இவனது குடும்பத்தவர் கொதித்தாறிய குழாய் நீரையே வழமையாகப் பருகுவார்கள். அந்த நீர் சுத்தமானதல்ல என்று சேந்தன் ஆட்கள் கருதியதால் இவன் போத்தலில் அடைக்கப்பட்ட 'மினரல் வோட்டர்' வாங்கி வைத்திருந்தான். அப்படியெல்லாம் சுத்தம் பார்த்தவர்களின் குப்பைகளை அள்ளி பெரிய கறுப்பு நிற பொலித்தீன் பையில் இட்டுக்கட்டி வெளிவாசலில் வைத்தவன், ஈரத் துணியால்; நிலத்தைச் துடைக்கத் தொடங்கினான்.

இவனது வீட்டிலுள்ளோர் வீட்டுக்குள்; காலணிகள் அணிவதில்லை. ஆனால் வெளிநாடுகளில் இருந்து வருவோர் குளியலறை, மலகூடம், சமையல் அறையென வீடு முழுதும் இறப்பர் செருப்புக்களை அணிந்தபடி திரிவார்கள். அவர்களுக்கு ஒன்றும் சொல்ல முடியாது.
...

கொழும்பையும் யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் பிரதான பாதை மூடப்பட்ட பின்னர் வெளிநாடுகளில் வசிப்போர்;, கொழும்புக்கு வந்து 'கிளியரன்ஸ்',விமானப் பயணச் சீட்டு என்பவற்றைப் பெற்றே யாழ்ப்பாணம் செல்ல வேண்டியுள்ளது. இதற்காக அவர்கள் கொழும்பில் ஒருவாரமளவில் தங்க வேண்டியுள்ளது. அவர்களிடம் இருக்கும் வசதிக்கு பெரிய நட்சத்திர விடுதிகளில் கூடத் தங்கலாம். ஆனால் உறவினர், நண்பர்கள் வீடுகளிலேயே தங்குகின்றனர். கொழும்பில் தங்கள் தேவைகளுக்காக பல கூட்டிச் செல்ல நண்பர்கள், உறவினர்களை அழைக்க இது வசதியெனக் கருதகிறார்கள்.
...

சேந்தன் இவனது உறவினன். தூரத்து உறவுவழியில் சகோதரன் முறை. சமவயதினன். உறவினன் என்பதிலும் பார்க்க இருவரும் நண்பர்களாகவே பழகியிருக்கிறார்கள். சிறுவயதில் ஒன்றாக விளையாடித் திரிந்தவர்கள்.

சேந்தன் பத்தாம் வகுப்புக் கடைசியில் கனடா போனதன் பின்னர் அவனுக்கும் இவனுக்கும் தொடர்பறுந்து போயிருந்தது. பதினெட்டு வருடங்களாக எந்தத் தொடர்புமில்லாதிருந்த சேந்தன், திடீரென தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் அடுத்த வாரம் குடும்பத்துடன் இலங்கை வருவதாகவும் தங்களை கட்டுநாயக்காவுக்கு வந்து கூட்டிச் செல்லுமாறும் கூறி விபரங்களைக் கூறிபோது இவனால் மறுக்க முடியவில்லை.

இந்த வீட்டில் மேலதிகமாக ஒருவரை தங்க வைப்பதே சிரமமாயுள்ள போது நால்வரைக் கொண்ட சேந்தனின் குடும்பத்தினரை தங்க ஒத்துக் கொண்டது தவறெனப் புரிகின்றது. ஆனால் மறுத்திருந்தால், அசோகன் இப்ப மாறிப் போய்விட்டான் என்று சேந்தன் பலரிடம் சொல்லித் திரியலாம்.


அவனின் குடும்பம் வந்து நின்ற நாட்களில் பிள்ளைகளுக்கு தவணைப் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது. பரீட்சைகளுக்கு ஆயத்தப்படுத்த பிள்ளைகள் சிரமப்பட்டதை இவன் அவதானித்திருந்தான். வந்தவர்கள் நடுக்கூடத்தில் இருந்து தொலைக்காட்சியின் சத்தத்தை அதிகரித்து விட்டு கத்திக் கும்மாளமிட்டார்கள்.

சேந்தனின் குடும்பத்தவர்களுடன் புறக்கோட்டைக்குச் சென்றிருந்தான். சேந்தனும் மனைவியும் ஒவ்வொரு பொருளையும் வாங்குவதற்கு பேரம்பேசியது இவனுக்கு ஆச்சரிமாயிருந்தது.
சேந்தன் சிறுவனாக இருந்த காலத்தில் கொழும்பில் தொழில் புரிந்த தகப்பன் வங்கியொன்றில் அவனின் பெயரில் சிறுவர் சேமிப்புக் கணக்கொன்றை ஆரம்பித்திருந்தார். அந்தக் கணக்கை மூடி பணத்தை மீளப் பெற வேண்டுமென சேந்தன் இவனைக் கூட்டிக் கொண்டு கொட்டாஞ்சேனையில் இருந்த அந்த வங்கிக் கிளைக்கு வெள்ளவத்தையில் இருந்து பஸ்ஸில் சென்றான்.

தொடர்ச்சியாக பல வருடங்களாக நடவடிக்கைகள் ஏதுமற்றிருந்த அந்தக் கணக்கு அரசின் புதிய சட்டதிட்டங்களின்படி மூடப்பட்டு பணம் மத்திய வங்கிக்கு அனுப்பப்பட்டிருந்தது. அசோகன் வங்கி முகாமையாளருடன் கதைத்துப் பார்த்தான். அவர் இவனுக்கு புதிய சட்டதிட்டங்களை தெளிவாக விளக்கினார். ஆனால் சேந்தன் முகாமையாளரை ஏசியபடி வந்து, இவனை மத்திய வங்கிக்கு வருமாறு கூப்பிட்டான். அங்கு சென்றாலும் இந்த பணத்தை பெறமுடியாது என்பது இவனுக்குப் புரிந்தது. ஆனால் சேந்தன் இவனை விடுவதாயில்லை. இருவரும் அங்கு போய் அலைந்ததுதான் மிச்சம்.
...

யாழ்ப்பாணம் சென்று திரும்பியவர்கள் சற்றுக் கறுத்திருந்தார்கள். பிள்ளைகளில் வாட்டம் தெரிந்தது. யாழ்ப்பாணக் காலநிலை ஒத்துவராமல் பிள்ளைகளுக்கு வருத்தம் வந்ததாகச் சேந்தன் சொன்னான். அந்த வெக்கைக்குள்ளை எப்படித்தான் மனிஷர் சீவிக்கிறார்களோ என ஆச்சரியப்பட்டுக் கதைத்தான்.

இரண்டாம் தவணை விடுமுறை ஆரம்பித்திருந்ததால் அசோகனின் பிள்ளைகளும் சேந்தன் குடும்பத்தினருடன் காலையில் தெகிவளை மிருகக் காட்சிச்சாலைக்குச் சென்றிருந்தனர். மாலையில் அவர்களுடன் பொருட்கள் வாங்க பல கடைகளுக்கு அலைய வேண்டியிருந்தது.


யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு வந்த - கொழும்பில் வாங்கிய பொருட்களை சேந்தன் சூட்கேஸ்களில் அடுக்கிக் கொண்டிருந்தான். அவர்களது விமானம் அடுத்தநாள் காலையில் புறப்படவிருந்தது.
...

அதிகாலையில் கட்டுநாயக்கா விமான நிலைத்துக்குச் சென்று சேந்தனின் குடும்பத்தவர்களை வழினுப்பிவிட்டு வந்தான். இனி, அவர்கள் கனடா போய்ச் சேர்ந்ததை அறிவிக்க ஒருமுறை தொலைபேசி எடுக்கக்கூடும். பிறகு அடுத்தமுறை இலங்கைக்கு வருவதற்கு ஓரிரு வாரங்கள் முன்னதாக கட்டாயம் அழைப்பு எடுப்பார்கள்.


இப்போது வீட்டைச் சுத்தம் செய்ய பாடசாலை விடுமுறையில் நிற்கும் பிள்ளைகள் அசோகனுக்கு உதவினர்.

தொலைபேசி ஒலித்தது. சேந்தனின் அம்மா-இவனுக்கு தூரத்துப் பெரியம்மா கதைத்தார். சேந்தனாக்களை விமான நிலையத்துக்கு கூட்டிச் சென்ற விபரங்களை முதலில் விசாரித்து அறிந்தவர், .

'...அசோகன், நீ வடிவாக சேந்தன் ஆட்களைக் கவனிக்கேலையாம். கனகாலமாய் கொழும்பிலை இருக்கிறனி நினைத்திருந்தால் அவன்ரை 'பாங்' கணக்கை மூட உதவிசெய்திருக்கலாமாம். உன்ரை பெண்சாதி பிள்ளைகள் அதுகளோடை வடிவாய்ச் சேரேலையாம். சொந்தக்காரன் அசோகன் கொழும்பில இருக்கிறான் என்றுதானே உன்னைத் தேடி அதுகள் வருகுதுகள்....' என்று தொடர்ந்து
'மார்கழியிலை இளையவன் வசந்தன், குடும்பத்தோடை லண்டனிலிருந்து வாறான். அதுகளை ஒருக்கா கவனமாய் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி விடு ராசா' என்று முடித்தார்.

Sunday, October 9, 2011

நீயே நிழலென்று

ஸ்ரீரஞ்சனி













தொலைபேசி ஒலிப்பிய மணிச்சத்தம் கேட்டதும் மீன் வெட்டிக் கொண்டிருந்த கையை அவசரமாகக் கழுவி விட்டு, அது தீபாவாகத் தானிருக்கும் என்று ஆர்வத்துடன் ஓடிச் செல்கிறேன் நான். ஆனால் அது வழமையாக வரும் மாதாந்த கிறிஸ்தவ ஆராதனை பற்றிய பிரச்சாரத்துக்கான மின்கணிணி அழைப்பு என தொலைபேசி இலக்கத்தைப் பார்த்ததும் புரிகிறது. எனக்குத் தேவையற்ற அந்தச் செய்தி தொலைபேசியில் பதியப்படாமல் இருப்பதற்காக றிசீவரைத் தூக்கி மீண்டும் வைத்து, வந்த லைனைக் கட் பண்ணி விட்டு மீண்டும் குசினிக்குள் போகிறேன். இருந்தாலும் அவள் சொன்ன மாதிரி எப்படியும் இன்று போன் பன்ணுவாள் என்பதில் எனக்கு எந்தவித ஐயமும் இருக்கவில்லை.
அந்த நினைவைத் தொடர்ந்து தீபா பல்கலைக்கழகம் போக முன் சினேகிதர்களுடன் காம்பிங்க்குப் போன போது. எதிர்பாராமல் வந்து மனதில் நிறைவை ஏற்படுத்திய அவளின் கோல் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.

'மம், கௌ டிட் யுவர் அப்பொயின்ற்மேன்ற் கோ?'
', பிள்ளைக்கு எப்பிடி ஞாபகம் வந்தது? எங்கையிருந்து போன் எடுக்கிறாய்?'
'இங்கையிருக்கிற ஒரு கடையிலிலை இருந்து போன் பண்ணுறன். என்ன நடந்தது எண்டு கேக்கிறதுக்காண்டியும், உங்களோடை கதைக்கிறதுக்காண்டியும் ஒரு மூண்டு மைல் தூரம் ஓடி வந்தனான.;'
' மை பேபி, ற் வாஸ் ஒகே. அவ்வளவு தூரம் தனிய ஓடி வந்தனியே?'
'யேஸ், லவ் யு, என்ன நடந்தது எண்டு எனக்கு தெரியோணும் போலிருந்தது.'
'அம்மாவுக்கு டே சேஜறி நடந்த போது ஆறு வயசுக் குட்டியாய் இருந்த போதே கெற் வெல் காட் செய்து கொண்டு வந்தவள் எல்லே என்ரை பிள்ளை,' மனசு சிலிர்த்துக் கொள்கிறது. உண்மையிலேயே அவளுக்கு என்னில் அத்தனை பாசம் தான்.

ஏதாவது சாப்பிடக் கொடுத்தால், 'நல்லா இருக்குது, தாங்ஸ். நீங்கள் சாப்பிட்டியனியளே?' என பாராட்டும் கரிசனையுமாக கேட்பாள். வீட்டில் நிற்கும் பொழுதுகளில் 'அம்மா நான் சாப்பாடு செய்யப் போறன், உங்களுக்கு நூடில்ஸ் சாப்பிட வேணும் போலிருக்கா அல்லது ஏதாவது சான்ட்விச் செய்யட்டா?' என்பாள். 'கடைக்கு நீங்கள் மட்டும் போக வேண்டாம். நானும் வருகிறேன் போட்டு வந்து கோம் வேக் செய்யலாம். டோன்ற் வான்ற் யு பி எலோன்,' பிடிவாதாமாய்ச் சொல்வாள்.
அப்படி அவள் என்னுடன் ஒட்டிக்கொண்டு இருந்ததால் தான் இப்ப இப்படி இருக்கும் தனிமையைத் தாங்க முடியவில்லை என்ற நிதர்சனத்தில் மனது மிக வலிக்கிறது.

கலியாணம் செய்து ஐந்து வருடங்களாகியும் கர்ப்பம் தங்கவில்லை. அதற்காகப் பல வேண்டுதல்கள், ஆயிரம் பரிசோதனைகள், அதை விட மற்றவர்களின் கேள்விகள், குடையல்கள் என்று இருந்த போது எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்குமாய்ப் போல் எதிர்பாராத ஆச்சரியமாய் தீபா என் வயிற்றில் வந்த போது எனக்கு வந்த ஆனந்தம் அளவிட முடியாதது.

அன்றிலிருந்து வேலையைக் கலியாணம் கட்டியினியளோ, என்னைக் கட்டினியளோ என அவரிடம் போட்ட சண்டைகளுக்கும் கூட முற்றுப்புள்ளி வந்தது. அவளை என் கைகளில் வாங்கிய கணத்திலிருந்து அவரைக் காணவில்லை என தவித்து, ஏங்கிப் பின்னர் அந்தக் காத்திருப்பு எரிச்சலைத் தர அவருடன் பிரச்சனைப்பட்ட பொழுதுகள் போய் அவர் வீட்டுக்கு பிந்தி வந்தால் நல்லம் என மனம் எண்ணும் அளவுக்கு தீபாவுடன் என் வாழ்க்கை ஐக்கியமாய்ப் போய் விட்டது.
காலையில் பாடசாலைக்குப் போய் மாலை 2 மணிக்கு வீட்டுக்கு வந்த பின் இரவு படுக்கும் வரை அவளுடன் விளையாடுவதில் எனக்கு நேரம் எப்படி போவது என்றே தெரிவதில்லை.
பின்னர் அவளுக்கு மூன்று வயதான போது விஸ்வருபம் எடுத்த நாட்டுப் பிரச்சனை எம்மை நாட்டை விட்டுத் துரத்தி கனடாவில் தஞ்சம் கேட்க வைத்தது. அங்கு செய்த தொழிலை இங்கு தேட வேண்டுமானல் மேலும் படிக்க வேண்டும் என்று ஆன போது விடியவெள்ளன நித்திரையில் பிள்ளையை இழுத்துக் கொண்டு போய் பிள்ளைகள் காப்பகத்தில் விட்டுவிட்டு அதற்காகப் படிக்க போவதையோ அல்லது வேறு வேலைக்கு ஓடுவதையோ என்னால் கற்பனை பண்ணிப் பார்க்கவும் முடியவில்லை.
'ஒரு பிள்ளை தானே நான் வீட்டில் இருக்கிறேன் நீங்கள் உழைத்தால் போதும்' என கணவனிடம் சம்மதம் வாங்கிக் கொண்டேன்.
ஒருநாள் நாங்கள் இருந்த தொடர் மாடிக்கட்டிடத்தின் முன் இருந்த நூலகத்துக்குப் போய் 'மூன்று வயதுப் பிள்ளையை உள்ளே கூட்டி கொண்டு வரலாமோ' என நான் அசட்டுத்தனமாய்க் கேட்கிறேன். அந்த நூலகர் பிள்ளையின் பெயரில் 'லைபிரரிக் காட்' கூட எடுக்கலாம் என கனடாவில் பிள்ளைகளுக்கும் இலக்கியத்துக்கும் கொடுக்கப்ப்டும் முக்கியத்துவத்தைக் கோடிட்டுக் காட்டுகிறார். பிறகென்ன எங்கள் பொழுதுகள் அங்கு ஆனந்தமாய்க் கழிகின்றன.

தீபா பாலர் வகுப்பை ஆரம்பித்த போது பெரிய கதைப் புத்தகங்கள் வாசிக்குமளவுக்கு அவளின் வாசிப்புத்திறன் விஸ்தரித்திருந்தது. அப்போது அந்தப் பாடசாலையில் ஆரம்பித்த ஒரு பரீட்சார்த்த வாசிப்புப் பயிற்சியின் வெற்றியைப் பற்றி மற்றவர்களுக்கும் அறிவிப்பதற்கு அவர்கள் செய்த விளம்பரத்தில் an immigrant child in JK can read chapter books without any hesitance என வருகிறது. இதனால் அவளின் கெட்டித்தனம் செய்தியாக, பல பெற்றோர் என்னை ஒரு வெற்றியாளராகப் பார்க்கின்றனர். எப்படி நான் அவளைப் படிப்பிக்கிறேன், தங்கள் பிள்ளைகளுக்கு தாம் எப்படி உதவலாம் என என்னைப் பல விசாரணைகள் செய்கின்றனர். நானும் புளகாங்கித்துப் போகிறேன். அவளின் வெற்றி மட்டும் என் வாழ்வுக்குப் போதுமானது என மனம் நிரம்பி விடுகிறது.

முதலாம் வகுப்பில் அவளுக்கும் மட்டும் அவளின் ஆசிரியர் பிரத்தியேகமாய் கொடுத்த project ல் Red Panda பற்றி எழுத அவள் முடிவெடுக்கிறாள். நூலகரிடம் போய் Red Panda பற்றிய புத்தகங்கள் அங்கு இருக்குமா என அவரின் மின்கணிணியில் உள்ள பதிவுகளில் தேடிப் பார்த்துச் சொல்ல முடியுமா எனக் கேட்கிறோம்.

அவர் ஒரு குறித்த இலக்கத்தைத் தந்து அந்த இலக்கத்தின் கீழ் தான் Red Panda சம்பந்தமான எல்லாப் புத்தகங்களும் இருக்கும் என்கிறார். அதற்குத் தீபா Red Panda ஒரு Panda இல்லை,' எனச் சொன்ன போது அவருக்கே அது செய்தியாக இருக்கிறது. அவளின் அறிவில் அவர் வியந்து போகிறார்.

 'தீபா, உனக்கு எப்படித் தெரியும்? ரீச்சர் சொன்னவவா?' என ஆவலுடனும் பெருமையுடனும் கேட்கிறேன்.

'இல்லை ரீவியிலை பார்த்தனான்,' என்கிறாள். இப்படி அவளின் அறிவை, ஞாபகசக்தியை, புத்திக் கூர்மையைப் பார்த்து வியந்த சந்தர்ப்பங்கள் ஏராளம். அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் பதில் தேடி நான் ஆராய்ந்த பொழுதுகள் கணக்கில் அடங்காதவை. அவளின் பாசமும் கெட்டித்தனமும், அமைதியான சுபாபமும் இவளைப் பிள்ளையாகப் பெற நான் என்ன புண்ணியம் செய்தேன் என எப்போதும் என்னைக் கண் மல்க வைக்கும். அவளின் சான்றிதள்களையும் தேர்ச்சித்தாள்களையும் வங்கியில் பாதுகாப்பான இடத்தில் வைத்து அதுவே எமது சொத்தாக மனம் மகிழ்கிறோம்.

ஒவ்வொரு முறையும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு முடிந்து வந்த பின் ஆசிரியர் அவளைப்; பற்றிச் சொல்லிப் பாராட்டியவை யாவும் பல தடவைகள் மீள மனதில் ஓடி ஒரு இனம் புரியா மகிழ்வைக் கொண்டு வரும்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் Science centre, museum என்று அவளுடன் போவதும் நாள் முழுக்க அங்கு கழிப்பதும் எமது வாடிக்கையாகின. கோடை விடுமுறை வந்து விட்டால் Wonderland, Ontario Place, strawberry picking, camping என்று போய் நானும் அவளுடன் என்னை மறந்து மகிழ்வது தான் எமது வாழ்க்கையாகிறது. போதாதற்கு piano வகுப்புக்கள் swimming பயிற்சிகள் என்று எப்போதுமே ஓட்டம் தான்.

பின்னர் அவள் வளர்ந்த பின் 'கை உளையுது, கால் உளையுது, சோம்பலாயிருக்குது' என நான் சொன்ன பொழுதுகளில் என் உடல் வலுவைப் பேண, என்னை இழுத்துக் கொண்டு வீட்டைச் சுற்றிச் சுற்றி அவள் ஓடிய ஓட்டங்கள்... இப்படிப் பல நினைவுகள் மாறி மாறி வந்து கண்ணீரை கொட்ட வைத்துக் கொண்டிருந்தன.

மருத்துவக்கல்லூரியில் அவள் விசேட சித்தியடைந்து மேற்படிப்புக்காக புலமைப்பரிசில் கிடைத்து அமெரிக்காவுக்குப் போய் பத்து மாதங்கள் ஆகிவிட்டன. எனக்கு இன்னமும் அதை ஏற்கும் மனப்பக்குவம் வரவில்லை. அது மட்டுமன்றி மன அழுத்தம் என்று குளிசை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குப் வந்து விட்டேன்.

சென்ற முறை இது பற்றிக் கவுன்சிலருடன் கதைத்தவை நினைவுக்கு வருகின்றன. 'சரி! உங்களுக்கே உங்கடை பிரச்சனை விளங்குது. பிள்ளைக்காக வாழ்ந்து போட்டு இப்ப இப்படி இருக்கிறது எந்த வித நோக்கமும் இல்லாத வாழ்வு எண்டு நீங்கள் நினைக்கிறியள். அது உங்களுக்கு சலிப்பை, ஏமாற்றத்தைத் தருது.'

'ஓம்! நீங்கள் சொன்ன மாதிரி தொண்டர் வேலைக்கு போறனான். ஆனாலும் அது பெரிசாய் உதவேல்லை,' மீண்டும் கண்ணீர் தடைசெய்ய முடியாமல் ஓடுகிறது.

'இந்த விரக்தியிலிருந்து வெறுமையிலிருந்து மீள என்ன செய்யலாம் எண்டு நீங்கள் நினைக்கிறீர்கள்?'

மௌனமாய் இருக்கிறேன்.

கவுன்சிலரே தொடர்கிறார், 'ம், உங்கடை மனம் நிறைஞ்சு போற மாதிரி ஏதாவது ஒண்டோடை ஒட்டிப் போகவேணும். மகளோடை போய் இருந்தால் நல்லம் எண்டு நினைக்கிறியளோ, அதுக்கு வழி இருக்குதோ அல்லது இங்கை உங்களுக்கு எண்டு ஒரு வாழ்வை உருவாக்கப் பாருங்கோ. எதையும் யோசியாமல் மனம் லயித்து செய்யக்கூடியதாய் ஏதாவது படிக்கலாம் அல்லது வேலை செய்யலாம். ஏன் ஒரு பிள்ளையைத் தத்தெடுத்து கூட வளர்க்கலாம். இந்த மன நெருக்கீட்டிலிருந்து இருந்து வெளியேற வேணும் இல்லையா? யோசித்துப் பாருங்கோ. அடுத்த முறை வரும் போது ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாய்க் கதைப்பம்,'

அப்படி கவுன்சிலர் சொன்னது பற்றி யோசித்துப் பாக்கிறேன்.

பல்கலைக்கழகத்திற்கு போன பின் தானே தன் வேலை எல்லாம் செய்யப் பழகி, என்னில் தங்காமல் வாழ தீபா பழகிக்கொண்டாள். நான் விடிய எழும்பி சாப்பிட்டிட்டியா, சாப்பாடு எடுத்தியா எண்டு கேட்டால், சில வேளைகளில் அவளுக்கு எரிச்சல் கூட வந்திருக்கிறது. அப்பவெல்லாம் அவளின் மற்றவர்களில் தங்கியிராத தன்மையைப் பற்றி மகிழாமல், 'என் தேவையை நாடுகிறாள் இல்லையே என்று கவலைப்பட்டிருக்கிறேன';. இப்ப என்னில் ஒரு பகுதியை இழந்தது போல் என்ன செய்வதெனறு தெரியாமல் குழம்பிப் போய் நிற்கிறேன், அவளின் அசைவை எப்போ என் கருப்பையில் நான் உணர்ந்தேனோ அன்றிலிருந்து நான் அம்மாவாக மட்டுமே இருந்திருக்கிறேன்.
என்னைப் பற்றி எந்த நினைவும் இல்லாமல், எனக்கென ஒரு அடையாளமும் ;ல்லாமல,; வெறும் தீபாவின் அம்மாவாக மட்டுமா வாழ்ந்ததால் தான் எனக்கென ஒரு இலக்கு இல்லாது என் வாழ்க்கைப் படகு ஆட்டம் காண்கிறது என்பது புரிகிறது. வாழ்க்கை பல பக்கங்களைக் கொண்டது எல்லாவற்றிலும் ஒரு சமநிலையான அணுகுமுறை இருந்திருக்க வேண்டும் என்பதும் விளங்குகிறது.

மீண்டும் தொலைபேசி மணி ஒலிக்கிறது.
அது தீபா தான்.
'அம்மா எப்படியிருக்கிறீங்கள்?' அவளின் குரல் என் காதுகளில் தேனாய் ஒலிக்கிறது. 'நல்லாய் இருக்கிறன். நீ எப்படி இருக்கிறாய்?' குரலில் மனம் நிறைந்த மகிழ்வுடன் கேட்கிறேன்.

'ஒவ்வொரு முறையும் நான் கதைக்கேக்கை நீங்கள் அழுகிறது, பிறகு அதை நினைச்சு நான் கவலைப்படுகிறது பற்றியெல்லாம் யோசித்துப் பாத்தன். அப்பாவும் தன்ரை வேலையை விட்டுவிட்டு இங்கே வரமாட்டன் என்கிறார். நீங்களும் அவரை விட்டுவிட்டு எப்படி வாறது என்று யோசிக்கிறியள். என்ரை படிப்பு முடிய இன்னும் 2 வருஷம் இருக்குது. அது தான் அப்பாவோடை கதைச்சுப் பாத்தன். இங்கை ஆறு மாசம், உங்கை ஆறு மாசம் நீங்கள் இருக்கலாம் எண்டு அவர் ஒத்துக்கொண்டிட்டார,;'
மிகச் சந்தோஷமாகச் சொல்கிறாள் அவள்.

'தீபாக்குஞ்சு, நான் உன்னை எவ்வளவு மனக்கஷ்டப்படுத்திப் போட்டனெண்டு விளங்குது. அப்பாவுக்கு சமைச்சுச் சாப்பிட்டுப் பழக்கமில்லை. சாப்பாட்டுக்கு என்னிலை தங்கியிருந்து அவருக்குப் பழகிப் போச்சுது. அங்கை நான் வந்தால் பிறகு அதைப் பற்றி வேறை கவலைப்பட வேணும், அதோடை நீயும் நான் தனிய இருக்கிறன் எண்டு நேரத்துக்கு வீட்டை வர வேணுமே எண்டு பரிதவிப்பாய். அதை விட அப்படி இரண்டு வருஷத்திலை படிப்பு முடிஞ்சதும் நீ அவசரப்பட்டு இங்கை ஓடி வர வேணும் எண்டுமில்லை.'

'அம்மா, அப்ப என்ன தான் செய்யலாம் என்றியள்.'

'நானும் யோசித்துப் பார்த்தனான். இவ்வளவு நாளும் நான் என்னை வளர்க்கேல்லை இப்ப இந்தச் சந்தர்ப்பத்தைப் பாவிச்சு அதைச் செய்வம் எண்டு நினைக்கிறன். அதாலை இனி என்னைப் பற்றிக் கவலைப்படாதை.'

'அம்மா உண்மையாகவா சொல்லுறியள்? எனக்காண்டிச் சொல்லேல்லைத் தானே? நீங்கள் உங்களுக்காண்டி வாழ வேணும் எண்டு நான் எவ்வளவு ஆசைப்பட்டனான்,' அவளின் குரலில் மகிழ்ச்சி கொப்பளிக்கிறது.

'ஓம், நான் இனி எனக்கெண்டு ஒரு வாழ்வை வாழுவம் எண்டு யோசிக்கிறன். அடுத்த முறை கதைக்கேக்கை ஒரு சப்பிரைஸ் உனக்குக் கிடைக்கும். இப்ப சொல்லு உன்ரை லைவ்வைப் பற்றி. மோகன் என்னவாம், படிச்சு முடிச்ச பிறகு தான் கலியாணம் எண்டதுக்கு சம்மதமாமோ? இல்லாட்டில் கட்டிப்போட்டும் படிக்கலாம் தானே! யோசித்துப்பார். அம்மாவுக்கு எல்லாம் சம்மதம் தான். இது உன்ரை வாழ்வு. உனக்குப் பிடிச்ச மாதிரி நீ முடிவு செய். மற்றவையைப் பற்றி அதிகம் போசிக்காதை,'
மனதார அவளுக்கு அதைச் சொல்லும் போது அதை எனக்கு நானே சொல்வது மாதிரியும் என் காதினுள் அது ஒலிக்கிறது.