Thursday, February 10, 2011

அவர்கள் உலகம்

கே.எஸ்.சிவகுமாரன்












மணி ஏழு!

கொழும்புக் கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து வண்டி புறப்படுகின்றது. கூட்டம் அதிகமில்லை.

இரண்டாம் வகுப்புப் பெட்டியென்றில் சுந்தரமூர்த்தியும் இன்னுமொரு இளைஞனும் இருக்கின்றனர்.

வேகமாக ஓடுகின்றது ரெயில்!

சுந்தரமூர்த்தி யன்னலூடே வெளிப்புறக்காட்சிகளைப் பருகிக் கொண்டிருக்கிறான். அந்த இளைஞனோ ஒரு நாவலின் கடைசிப் பக்கங்களைப் படித்துக் கொண்டிருக்கிறான்.

பிரபலமான ஒரு தமிழ் நாட்டுப் பிரசுராலத்தினரால் வெளியிடப்பட்டிருந்த அந்த நாவலின் ஆசிரியர் வேறு யாருமிலர்!

ஈழத்துப் பிரபல எழுத்தாளனான சுந்தரமூர்த்திதான்!

தன்னெதிரே சதையும் குருதியுமாக அமர்ந்திருக்கும் சக பிராயாணிதான் சுந்தரமூர்த்தி என்பதை அவ்விடம் வாசகன் அறியான்!

ராகமைக்கு வந்து சேர்கின்றது வண்டி.

'அப்பப்பா! என்ன வெப்பம்!' என்று அலுத்துக் கொள்கிறான் அந்த யுவன்.

பேச்சுத்துணைக்கு யாருமில்லை என்ற சுந்தரமூர்த்திக்கு மகிழ்ச்சிதான்!

'ஆமாம்! சரியான வெப்பநிலைதான்!'

'சிகரெட் பிடிப்பீர்களா?' கேட்பது யுவன்.

'மிக்க நன்றி, நான் புகைப்பிடிப்பதில்லை'

'ஆடத் சிகரெட்!' அவ்வாலிபன் வாயை அலங்கரிக்கிறது. கையிலிருந்த புத்தகத்தின் சில பக்கங்களை குறிப்பாற் படித்துவிட்டு மூடி வைக்கிறான்.

'மிகவும் பிரமாதம்!' விமர்சிப்பது அவ்விளைஞன்தான்!

'அப்படியா?'

'இந்த நாவலாசிரியர் இலங்கையைச் சேர்ந்தவர். சுந்தரமூர்த்தி என்று பெயர்'

'ஓகோ!' வேடிக்கை பார்க்க விரும்புகிறான் மூர்த்தி.

'மிஸ்டர் மூர்த்தியின் நாவல்களை நீங்கள் வாசித்திருக்கிறீர்களா?'

'உம்  - ஒன்றுமே வாசிக்கவில்லை நான். அப்படியென்ன பிரமாதமான எழுத்தாளரா அவர்?' என்று கேட்டுத் தன்னுள் சிரித்துக்கொள்கிறான் மூர்த்தி.

'அப்படிச் சொல்லக் கூடாது. இன்றைய தமிழ் நாவலாசிரியர்கள் வரிசையில் சுந்தரமூர்த்தி ஒரு முக்கிய இடம் வகிக்கிறார். தமிழ் கற்ற மேலை நாட்டறிஞர்கள் கூட, மூர்த்தியின் நாவல்களுக்கு தக்கமதிப்புக் கொடுக்கிறார்கள். அவரைப்பற்றி நீங்கள் கேள்விப்படவில்லையா?'

'கேள்விப்பட்டிருக்கிறேன்' மூர்த்திக்குத்தான் இன்னார் என்று சொல்ல வேண்டும் போலிருக்கின்றது. ஆனால், அவசரப்படவில்லை. வேடிக்கை பார்க்க விரும்புகிறான்.

மஹநுவர எக்ஸ்பிரஸ் துரித கதியில் ஓடிக்கொண்டிருக்கிறது.

'எங்கு வரைக்கும் போகிறீர்கள்?' வாலிபன் கேட்டான்.

'பேராதனைக்குப் போகிறேன்'

'அப்படியா நானும் அங்குதான் போகிறேன்.'

'அப்படியானால் யூனிவர்ஸிட்டியிலா படிக்கிறீர்கள்?'

'இல்லையில்லை! இனி மேல்தான் நான் அங்கு சேர வேண்டும். இப்பொழுதூன் புகுமுகப் பரீட்சைக்குத் தோற்றியிருக்கிறேன் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை'

'அப்படியா?'

'நீங்கள்... உங்கள் பெயரென்ன?'

'சுப்பிரமணியம்......' வேண்டுமென்றே ஒரு பொய்யைச் சொல்கிறான் மூர்த்தி.

'ஆமாம்... உமது பெயரென்ன?' என்று தொடர்ந்து அந்த இளைஞனைக் கேட்கிறான்.

'தில்லையம்பலம் என் பெயர். யாழ்ப்பாணத்தில் படிக்கிறேன். ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புக்களைக் கொண்ட ஒரு புத்தகக்கண்காட்சியை இலங்கைப் பல்கழைக்கழகத் தமிழ்ப்பகுதியினர் ஒழுங்குபடுத்தியிருக்கின்றனர். அந்த 'எக்ஸிபிஷனு'க்குத்தான் போகிறேன்' என்று முழு விபரங்களையும் கொடுக்கிறான் தில்லையம்பலம்.

பொல்காவலையில் ரெயில் வந்து நிற்கின்றது.

இவர்கள் இருக்கும் பெட்டியில் மூவர் வந்தேறுகின்றனர். அவர்களுக்கு இருபதிற்கும் இருபத்தைந்துக்கும் இடையில் வயது இருக்கும்.

அவர்கள் நடையுடை பாவனை முதலியன அவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என்பதைப் பறைசாற்றுகின்றன.

இருவர் 'வெள்ளைச் சுருட்டை' ஊதித்தள்ளுகின்றர். மூன்றாமவன் பிளாட்போமில் உலவுவோரைப் பற்றியும் புகையிரத நிலையத்திற்கு வருவோரைப் பற்றியும் விவரணத் தொகுப்பைத் தொடுத்துக் கொண்டிருக்கிறான்.

ரெயில் புறப்படுகின்றது.

'டிங்கிரி டிங்காலே' முதல் 'மாமா மாமா' வரை டப்பாப் பாடல்கள் எல்லாம் அவர்கள் தொனியில் புது மெருகு பெற்றுப்பெட்டியை ஆர்பரிக்கின்றன!

சக பிரயாணிகள் இருவரையும் அலட்சியம் பண்ணுகின்றனர் மாணவர்.

கடுகண்ணாவையை வண்டி வந்தடைகின்றது.

மாணவர்கள் தங்கள் சப்தஸ்வரங்களை நிறுத்துகிறார்கள்.

மூர்த்தியும் தில்லையம்பலமும் ஆர்வத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கின்றனர்.

தில்லையம்பலத்தின் கையில் இருக்கும் நாவலைக் காணும் ஒருவன்,

'லெற் மீ ஹவ் தற் புக்!' என்று வாங்கித்தன் நண்பர்களிடம் காட்டுகின்றான்.

'பூ! இவன்களுக்கெல்லாம் என்ன நாவல் என்று கேட்கிறேன்!' என்று ஆரம்பிக்கிறான் அம்மாணவர்களில் சூடிகையாய் தோற்றமளிக்கும் ஒருவன்.

தில்லையம்பலத்தின் முகத்தில் ஈயாடவில்லை. தன்னைப் பற்றித்தான் கூறுகின்றான் என்று.

சுந்தரமூர்த்திக்கு வியப்பு!

'இல்லை மச்சான் நாவல் என்றால் என்ன என்று தெரியாத புல்லுருவி பேனாக்கிறுக்கிகள் எல்லாம் 'எழுத்தாளர்கள்' என்று வெளிக்கிட்டிருக்கேக்குள்ள பின்ன, என்ன சொல்றதாம்?' என்று அந்த மாணவனே கூறி முடிக்கின்றான்.

சுந்தரமூர்த்திக்கோ விபரிக்க முடியாத அனுபவம் நாக்கு  குமுறுகின்றது. 'உமிரி' விழுங்குகின்றான்.

'என்ன மச்சான் 'கொன்' அடிக்கிறாள்? சுந்தரமூர்த்தி இதை எழுதியதாக்கம்' என்கிறான் சற்று உயரமான மாணவன்.

'அட, ஓஹே என்றானாம்! சுந்தரமூர்த்தி பெரிய எழுத்தாளனே! சும்மாபோடா! சுன்னாகத்திலே என்னுடைய பக்கத்துவீட்டுக்காரன் அல்லே அவன்' என்று பதிலளிக்கிறான் முதலாமவன்.

'பொய் மூர்த்தி கொழும்பிலேல்ல இருக்கிறான். உனக்கு எப்படியடாப்பா அவன் பக்கத்து வீட்டுக்காரனாவான்?' என்கிறான் மூன்றாமவன்.

'மச்சான் இந்த ராமாவின்ரை வாயில் ஒரு நாளும் பொய் வராது. கண்டியோ? உனக்குச் சங்கதி தெரியுமோ? இங்கிலிஷ; நாவல்களை வாசிச்சுப்போட்டு 'புளட்'டுகளைத் திருடித்தானாம் அவற்றைச் சாம்பாராய் அவித்து நாவல் சமைப்பதாக என்னிடம் கூறியிருக்கிறான், பேந்தென்ன?'

மற்ற மாணவர் இருவரும் ராமா என்றழைக்கப்படும் மாணவனின் புளுகுகளை நம்புவது போல் நடிக்கின்றனர். சுந்தரமூர்த்தி அதிர்ச்சியினால் கட்டுண்டவன்போல வாயடைத்து மாணவர்களின் அரட்டையைக் கேட்டுக்கொண்டிருக்கிறான்.

தில்லையம்பலமோ திறந்த வயர் மூடாது சுவராஸ்யமாக உரையால்களைக் காது குளிரக் கேட்டுக்கொண்டிருக்கிறான். அவனும் விரைவில் பல்கலைக்கழக மாணவனாகலாம் அல்லவா?

புகைவண்டி பேராதனையை வந்தடைகின்றது. எல்லோரும் இறங்குகின்றனர். மாணவர்கள் தூரத்தில் தெரியும் தங்கள் விடுதிகளுக்குச் செல்கிறார்கள்.

தில்லையம்பலம் சுப்பிரமணியத்திடம் (சுந்தரமூர்த்தி) விடைபெற்றுக் கொண்டு நிலையவாயிலைத் தாண்டிச் செல்கிறான்.

நிலையத்தல் காத்திருந்த சிலர் வந்திறங்கிய பிரயாணிகள் சிலருக்கு மாலையிட்டு வரவேற்கின்றனர்.

வந்திறங்கிய எழுத்தாளர்களுக்குப் பல்கலைக்கழக புத்தகக் கண்காட்சி வரவேற்புச் சபையின் உபசரிப்புத்தான் வேறென்ன.........?

சுந்தரமூர்த்தியிடம் இரு விரிவுரையாளர்கள் வந்து கைகுலுக்கி மாலை போட்டு அழைத்துச் செல்கின்றனர்.

மாலை ஐந்து மணி!

பேராதனைப்பல்கலைக்கழக முதியோர் சபையின் முன்னே பெருவாரியான மக்கள் கூடியிருக்கின்றனர்.

ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களைப் பார்ப்பதுடன் அவர்களுள் ஒரு சிலரை நேருக்கு நேர் காணும் வாய்;ப்பினையுந்தாங்கள் பெற முடியும் என்பதனால் மலைநாட்டு தமிழர் மட்டுமன்றி தமிழ்பேசும் இடங்களிலிருந்தும் மக்கள் வந்திருக்கின்றனர்.

பொதுமக்கள் புத்தகங்களைப் பார்வையிடு முன், பல்கலைக்கழகத் துணைவேந்தர், கண்காட்சிக்கு வந்திருக்கும் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

தனது குரலைத் கனைத்துக் கொண்டு அவர் ஆங்கிலத்தில் ஆரம்பிக்கின்றார்.

'சகோர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்தபிரபல ஈழத்துத் தமிழ் எழுத்தாளர் திரு.சுந்தரமூர்த்தியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். அவர் ஈழத்தின் பெயரை தமிழ் எழுத்துத்துறையில் பிரதிபலிக்கச் செய்துள்ளார் என்று தமிழ்ப்போராசிரியர்கள் என்னிடம் கூறினார்கள். அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதையிட்டு நான் பெருமை கொள்கிறேன். இதோ திரு.சுந்தரமூர்த்தி!'

'மிக்க நன்றி ஐயா!' என்று சுந்தரமூர்த்தி அவருக்கு ஆங்கிலத்தில் பதிலளித்துவிட்டு கூடியிருந்த மக்களுக்குத் தலைகுனிவதன் மூலம் தன் வணக்கத்தைச் செலுத்துகின்றான்.

நான்கு சுவர்களும் அதிர்கின்றன. கைதட்டல் ஒலி காதைப்பிளக்கின்றது.

தில்லையம்பலத்திற்கோ அளவில்லா ஆச்சரியம் சுப்பிரமணியம் என்ற பெயரில் காலையில் தன்னுடன் பிரயாணஞ் செய்த அந்தப் பிரகிருதிதான் பிரபல எழுத்தாளர் சுந்தரமூர்த்தி என்று அறிய வெகு நேரம் பிடிக்கவில்லை.

'ராமா' என்றழைக்கப்பட்ட அந்தப் பல்கலைக்கழக மாணவனுக்கும் அவன் கூட்டாளிகளுக்கும் தாங்க முடியாத அவமானம். தாங்கள் 'புழுகி'யதைக் கேட்டு அவன் என்ன நினைத்திருப்பானோ என்று வருந்துகின்றனர். அவன் தங்களுடன் பிரயாணஞ் செய்வான் என்றோ ஒரு புத்தகக்கண்காட்சி பேராதனையில் நடைபெறுமென்றோ அவர்கள் காத்திருக்கவில்லை. அதனாலேயே அவர்கள் தங்களுக்கே உரித்தான கேலிப் பேச்சுகளிலும் சேட்டைகளிலும் புளுகுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

'ஏன் ஸேர்? கண்டிக்குப் போவோமா? இன்றைக்கு இராச்சாப்பாடு உங்கள் கணக்கில்தான்' ராமா தன் நண்பர்கள் புடைசூழ மூர்த்தியை நெருங்கிக்கேட்கிறான்.

'பொறுங்கள் தம்பிமாரே! உங்களை எனக்குத் தெரியாதே எப்படி நான் உங்களை அழைத்துக் செல்வேன்?'

'ஐயா எழுத்தாளர் மூர்த்தி அவர்களே! சும்மா போஸ் காட்டாதீங்க! வாங்க ஸேர், போகலாம்' ஒருவன் துணிந்து மூர்த்தியை இழுக்கிறான்.

'மன்னியுங்கள், உங்கள் விருப்பத்தைப்பூர்த்தி செய்ய முடியாததையிட்டு வருந்துகிறேன்.' என்று மிடுக்குடன் பதிலளிக்கிறான் மூர்த்தி.

அதற்குமேல் அவனைத் தொந்தரவு செய்ய அவர்கள் விரும்பவில்லை.

'சரி! சரி! பாதமில்லை! ஆனால் மனதில் எதையும் வைத்திருக்காதீர்கள். எங்கே! கைகுலுக்குங்கள் பார்க்கலாம்.'

'சே! அப்படியொன்றும் தவறாக நான் நினைத்துக் கொள்ளவில்லை' சுந்தரமூர்த்தி மாணவர்களுடன் கைகுலுக்குகின்றான்.

மன நிம்மதியுடன் அவர்கள் அவனை விட்டுச் சென்றனர். உண்மையில் சுந்தரமூர்த்திக்கு மாணவர்கள் மீது சிறிதேனும் கோபம் வந்ததில்லை! மாணவர்களின் கோலாகலமான கேளிக்கைகளைப் பற்றி அறிந்திராத எழுத்தாளனும் ஒரு எழுத்தாளனா? சுந்தரமூர்த்திக்குக் தெரியும் அவர்கள் உலகம், ஒரு தனியுலகம் என்று!.


                                                     1960


No comments:

Post a Comment