Sunday, April 24, 2011

றைட்டோ ...........................?

சாந்தினி. வரதராஜன்,ஜேர்மனி.

லைகள் கூட அசையாது நிற்கும் வெப்பிராய காலத்தில் மழை கொட்டிக்கொண்டிருந்தது. இருட்டும் வெளிச்சத்தை விரட்டிக்கொண்டிருந்ததால் பகல் மறைந்த காலம் நீண்டு கொண்டேபோனது. இங்க எல்லாமே மாறிப்போய்விட்டது எண்டு ரவிக்கு தொலைபேசியில் சொல்லக்கூட பயமாக இருந்தது. வெளியில அந்த சனியன்கள் இந்த மழைக்கு என்ன செய்யுங்கள்? . இதுகள் எங்கட வீட்டு வாசலில மண்மூட்டைக்குள்ள பதுங்கிக்கொண்டு எப்ப பார்த்தாலும் ஆரோ வருவினம் எண்ட மாதிரி தெருவையே பார்த்துக்கொண்டிருக்கிறதை வெளிநாட்டாக்கள் பார்த்தால் ஏதோ எங்களை பாதுகாக்கத்தான் இவை இருக்கினம் எண்டுதான் நினைப்பினம். லாஸ் மிக் றூயிக் (என்னை அமைதியா இருக்கவிடு) சுமி டொச்சில் புலம்பிக்கொண்டிருந்தாள். எத்தனையோ காலமாய் இதைத்தான் நாங்களும் சொல்லிக்கொண்டிருக்கிறம்.. வாழ்க்கை பாதளத்தின் நடுவே மெல்லிய கயிற்றில் ஊசலாடிக்கொண்டிருப்பதைப்போல ஓர் உணர்வு எழுந்து கொண்டே இருந்தது. அப்போதெல்லாம் வீடு செல்லல் பற்றிய நினைவுகள் எப்போதும் மனதில் நடந்து திரியும் கனவாகத்தான் இருந்தது.

நினையாப் பிராகாரம் அதுவும் ஒரு விடியாத இரவில் என்னையும் பிள்ளைகளையும் ஜேர்மன் அரசாங்கம் நாடு கடத்திய நிகழ்வை நினைத்தால் இப்பவும் மனம் நடுங்கியது. விமான நிலையத்தில் எதை நினைத்து அழுவது? எங்களைக் காணமல் ரவி தேடப்போகிறரே எண்டு அழுவதா? நானும் பிள்ளைகளும் இனி என்ன செய்யப்போகிறம் எண்டு அழுவதா? எதுக்கெண்டு அழுவது? ஜரோப்பிய தெருக்களில் எங்கள் முகங்களில் வாசித்த அதே வார்த்தையை இங்கும் அகதிகள்;, சிகோனியர்(நாடோடிகள்) என தங்களுக்குள் கதைத்துக்கொண்டு எங்களை பரிதாபமாக பார்த்தார்கள். இவர்களுக்கு என்ன தெரியும்? இருப்பை தொலைத்து அலையும் எங்களைப்பற்றி, நாங்கள் வாழ்ந்த அந்த சந்தோஷமான வாழ்க்கையை பறித்தவர்களைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்? எவ்வளவோ சொல்லலாம் சொல்வதற்கு என்னிடம்தான் எந்த மொழியும் இல்லை.

இப்போதெல்லாம், நட்சத்திரங்களெல்லாம் தொலைந்துபோய் கிடக்கும் இரவு நேரங்கள் அமைதியாக கழிவதே இல்லை எப்பவும் ஏதாவத ஓரு குரல் கத்திக் குளறிக்கொண்டே இருக்கும். அந்த அழுகை ஒலியை இயமனின் முகம் கொண்ட அந்த பச்சை வாகனம் உறுமியபடி அள்ளி அழித்துக்கோண்டே போகும்.
2
இப்படி அழும் சத்தத்தை அதுவும் குளறி அழும் சத்தத்தை முன்பு ஒருபோதும் நான் கேட்டதே இல்லை. பின்னொரு நாள் அந்த அழுகை சத்தத்தை முதல் முதலாக ராகினி வீட்டில கேட்டனான். அப்போது எங்கள் தெருக்களில் நாங்கள் மட்டுமே வாழ்ந்த காலம் அது. எங்கள் தெரு எங்களின் பாதங்களை மட்டும் தடவிக்கொடுத்துக்கொண்டிருந்தது. நாங்கள் சிரிப்பதை பார்த்து அதுவும் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்த காலம். நாங்கள் ஓடிவிளையாடினோம், விழுந்தோம், பின் எழுந்தோம். சோளகக்காத்து வீசும் பொழுது இலைகளை சுருட்டிச் சுருட்டி காலுக்குள் விடும். அப்பொழுது புதிதாக வரும் சினிமாபட நோட்டீசை எடுத்து வீசியபடி கார் பறக்கும்.

நாங்களும் பறந்து பறந்து ஒருவரை ஒருவர் தள்ளி விழுத்தி முழங்கால் உரச விழுந்து எழுந்தோம்.. அதிலும் எம்.ஜி;ஆர், சிவாஜி எண்ட சண்டையும் பெரிதாகவரும். அந்தப்பொழுதில்தான் எங்கள் தெருவே ஒரு நாள் அழுதது. நிம்மியோடும் என்னோடும் கதைத்தபடி வண்ணார்பண்ணை சிவன்கோயில் மட்டும் சிரித்தபடிவந்த ராகினியின்ர மாமா கண்ணாதிட்டிப்பக்கம் திரும்பேக்க கைகாட்டிட்டு போனவர் யப்பான்நகைக்கடையிலையே செத்துப்போனார். அப்பத்தான் அத்தை, அக்கா, அம்மா எல்லாரும் ஜயோ எண்டு குளறினவை. நானும் நிம்மியும் நடுங்கிப்போனம். எங்கட ஆச்சி சாகேக்க இப்படி ஆரும் அழவே இல்லை. நல்லா வாழ்ந்திட்டு செத்துப்போனா மனுசி எண்டுதான் சொன்னவை. அம்மாவும், பெரியம்மாவும் மட்டும் அழுதவை. பந்தம் பிடிக்கேக்க திருராசா சொன்னவன் ´நீ கையைக்காட்டு எங்கட ஆச்சிதானே கை அழுகாது´ஹ எண்டு இவன் எப்பவும் இப்பிடித்தான் என்னை ஏமாத்திறவன் எண்ட பயம் எனக்கு பந்தம் பிடிக்கவே பயமா இருந்தது.

பிறகு பழையபடி நமச்சிவாய பதிகம் பாடேக்கையும் நெல்லுப்பொரி தூவேக்கையும் பயம் வந்திட்டுது. அதுக்கு பிறகு கொட்டடி நமச்சிவாய பள்ளிக்கூடத்துக்கு போகேக்க அதாலபோற சவத்துக்கு நெல்லுப்பொரி தூவியிரிப்பினம். அதை உழக்காமல் கவனமா நடந்தால் அதுக்குள்ள ராகினியும் திருராசாவும் என்னை தள்ளி தள்ளி விடுவினம். இவை எப்பவும் இப்பிடித்தான். எனக்கு ஏதாவது செய்வினம் அல்லது நான் சொல்லிறதை நம்பாமல் நையம் காட்டி சிரிப்பினம். எங்கட அம்மாவுக்கு எலிசபத் மகாராணி ஒரு குடை பரிசா குடுத்தவ எண்டு சொன்னா அதுக்கும் சிரிப்பினம்.
3
நான் அம்மாவைக்கொண்டு சத்தியம் பண்ணினான். அம்மா கவனமா வைத்திருக்கிற குடையின்ர கைபிடியில அவவின்ர படம் இருக்கு வாங்க காட்டிறன் எண்டு சொல்ல தங்கட வீட்டு குடையிலையும் அவவின்ர படம் இருக்கு எண்டு சொல்லி பெரிசா சிரிச்சவை.

சிரிப்பு....!

அதை மட்டும்தான் எங்கட தெருவும், வீடும், படிகளும், மரங்களும் கேட்டு கேட்டு மகிழ்ந்த காலத்தை நான் பார்த்திருக்கின்றேன்.. வர்ணம் விசிறிய வானவில்போல் வாழ்ந்த அந்த வாழ்க்கையை இனி நான் எங்கபோய் தேடுவன்? .என் சின்ன வயதில் மனிதர்களோடு பேசியதைவிட மரங்களோடு பேசியது அதிகம் கொய்யாமரமும், மாமரமும், நாவல்மரமும் நான் மிகவும் நேசித்த என்ரை செரிமரமும், பாலைமரமும் என்னிடம் கதைகேட்கும.; ஆனால் திருராசா ராகினிமாதிரி என்ர எந்தக்கதைக்கும் நையம் காட்டி சிரிக்கமாட்டினம், எவ்வளவு கதையும் சொல்லலாம் அம்மாவிடம் சொன்னால் அடிப்பா எண்ட பயக்கதையும் சொல்லலாம். அது ஆருக்கும் சொல்லாது. பொகவந்தலாவில இருந்து அண்ணா வேலைக்கு அனுப்பின நடராசா அம்மாவுக்கு முன்னால சின்ன பாப்பா சின்ன பாப்பா எண்டு என்னோட விளையாடுவான். ஆனா வைக்கல் பட்டறைக்கு பின்னால நிண்டு ஏதோ எல்லாம் காட்டி என்னை கூப்பிடுவான். எனக்கு காச்சல் வந்திட்டுது பிறகு அவனைக்கண்டா எனக்கு பயம் பயமா இருக்கும். அம்மா கேட்பா உன்னைக்கண்டா என்னத்துக்கு இவள் பயப்பிடுறாள்? அவனும் தெரியாத மாதிரி முகத்தைவைச்சிருப்பான் அம்மா பார்க்காத நேரம் பார்த்து கண் மடலை கையால மடக்கி சிவப்பாக்குவான். எனக்கு இன்னும் பயம்வரும். ஆனா அம்மாட்டை சொல்லவும் பயமா இருக்கும் அம்மா எனக்குத்தானே அடிப்பா. இந்த அம்மா எப்பவும் இப்பிடித்தான் ஆரும் பிழைவிட்டாலும் எனக்குத்தான் அடிப்பா. மெத்தைக்கு,தலையணிக்கு பஞ்சு மாற்றி தைக்க வாற ரெயிலர் கடைசி அறைக்குள்ள தைச்சுக்கொண்டு இருப்பார் ஒழிச்சு பிடிச்சு விளையாடேக்க சொல்லாதேங்க ரெயிலர் எண்டு சொல்லிப்போட்டு ரெயிலரின்ர காலுக்க ஒழிப்பன் மெத்தையின்ர துணியில பெரிய ஒருசதத்தை வைச்சு உருட்டி உருட்டி தைப்பார் அதை பார்க்க அவருக்கு பக்கத்திலையே நிற்பன் அப்ப எனக்கு தையல்மெசி;ன் எட்டாது நுனிக்காலை ஊண்டி எழும்பி எழும்பி பார்ப்பன் அவரும் ஏதோ எல்லாம் செய்து காட்டுவார். எல்லாவற்றையும் ஆருக்காவது சொல்லவேணும் போல இருக்கும். ஆருக்கு சொல்ல? மரங்களுக்கு மட்டும் சொல்லிக்கொண்டே இருப்பன்.
4
அம்மா அடிக்கிறதுக்கு பிரம்பெடுத்தால்போதும் ஓடிப்போய் கொய்யாமரத்தில ஏறியிருப்பன் ´எப்பிடியாவது இறங்கிவருவதானே அப்ப பார்´ எண்டு அம்மா சொல்லிக்கொண்டு போவா நான் கொய்யா மரத்துக்கு அம்மாவைபற்றி பொய்யெல்லாம் சொல்லுவன். பின்னால இருக்கிற ஜயனாருக்கு நேர்த்திவைப்பன் அம்மா கட்டாயம் இந்த வருஷம் வில்லூண்டி பிள்ளையார் திருவிழாவுக்கு முதல் செத்துப்போயிரவேணும். அப்பத்தான் எங்கட திருவிழாவுக்கு என்னை விரதம்பிடிக்க சொல்லமாட்டா, மூலஸ்தானத்துக்கு முன்னால இருத்தி தெற்பை போடேக்க சப்பாணம் கொட்டு எண்டு துடையில நுள்ளமாட்டா, பிறேமக்கா வீட்டுக்கு விளையாடப்போகலாம் கடவுளே. பிறகு அதே மாதிரி அம்மா கோயிலுக்கு போகேக்க விழுந்திட்டா முகமெல்லாம் காயம் எல்லாம் என்னல வந்தது நான் அழுதுகொண்டு அடிவளவுக்க ஓடிப்போய் ஜயானரே நான் மூண்டுதரம் துப்பிறன் நேர்த்தியை மறந்திடு எண்டு கெஞ்சினனான். நான் நேர்த்திவைச்சதாலதான் நீங்க விழுந்தனீங்க எண்டு அம்மாட்ட சொல்லுவமோ? அதுக்கும் அம்மா அடிச்சிட்டா. பிறகு வேப்பமரத்தில கட்டியிருக்கிற ஊஞ்சலில ஆடி ஆடி நாவல்மரத்துக்கு சொன்னனான். கதை கேட்பவர்களைவிட கதை சொல்லிக்குத்தான் அதில் இன்பம் அதிகம். இப்படியே கதைகேட்டும் கதைசொல்லியும் வாழ்ந்த காலம் எமக்கு தெரியாமலே மெல்ல மெல்ல நழுவிய எதிர்பாராத இரவொன்றில் வீட்டையும் மரங்களையும் தனியேவிட்டுவிட்டு வெளியேறிய பொழுதும் கதை சொல்ல ஆருமில்லாமல் இந்த வீடும் மரங்களும் எங்களை தேடித்தவித்திருக்கும். அவைகள் இப்பவும் காயப்பட்ட உடலோடும், மனதோடும் வயது முதிர்ந்தபடி என்னையே பார்த்து கொண்டிருந்தன. அவைகளின் குரல்கள் மாறமல் மிகுதி கதையை சொல் சொல் என கேட்டு அவதிப்படுத்திக்கொண்டிருந்தன. எதைச்சொல்வது? எதிலிருந்து ஆரம்பிப்பது? என்ரை அம்மாவை உங்களை எல்லாவற்றையும் தனியாக விட்டு விட்டு போன கதையையா? ஜரோப்பா தெருவெல்லாம் அகதியாக அலைந்தையா? எச்சில் கோப்பைகளையும், அவர்களின் மலசலகூடங்களை கழுவி கழுவி அழுத கதையையா எதைச்சொல்ல? எங்கு தொடங்கி எங்கு முடிக்க? அந்த பத்துவருடக்கதையை எப்படி சொல்லி முடிப்பன்...? இழப்பையும் துயரங்களையும் எங்கேயாவது ஒரு மூலையில் குவித்துவிடவேண்டும் என்று எத்தனை நாளாய் காத்திருந்தனான்.
5
வேறென்ன சொல்வேன் சொல்வதற்கு எவ்வளவோ இருக்கிறது. எல்லாமே வெளிச்சத்தில் நடந்து இருட்டில் மறைந்த கதைகள் இல்லை. அத்தனையும் நிஜங்கள் இருளை காட்டி வெளிச்சத்தில்தானே வாழ்கின்றீர்கள் என்றார்கள் சாத்தான்கள். இல்லை என்று மனம் சொன்னாலும் ஓம் எண்டுதான் தலை தன்பாட்டில் ஆட்டியது. இல்லை என்று சொன்னவர்களின் இரத்தத்தை மண் உறிஞ்சி சிவப்பானது.


வெளியே எறிவதற்கு பெருமூச்சை தவிர வேறு எதுவும் இல்லாத நாளொன்றில் கதைகேட்ட மரங்களையும் படிகளையும் விட்டுவிட்டு வீட்டுக்கும் மண்ணுக்கும் புறமுதுகு காட்டியபடி வெளியேறிய இரத்தம்தோய்ந்த பல கால்களோடு சேர்ந்து நடந்த கால்கள் ஏழு மலை தாண்டி, ஏழுகடல் தாண்டி தப்பிவிட்டோமென்ற நினைப்பு எழுந்தபொழுது பேய்கள் உலாவும் இன்னொரு தேசத்தில் விழுந்துகிடந்தேன். என்னை மீட்க குதிரை குளம்பொலி ஒலிக்க எந்த இளவரசனும் வரவே இல்லை. சாபத்தால் எல்லாவற்றையும் மறந்த துஷ்யந்தன்போல் ரவி வேலைநாட்களையும் டொச் மார்க்கையும் மட்டும் கணக்கு பார்த்துக்கொண்டிருந்தார் நானும் சகுந்தலையைப்போல் ஏதாவது நினைவிருக்கா என்று புலம்பியபடி சந்திக்கும் அத்தனை இலையுதிர்ந்த மரங்களோடு மனதை பகிர்ந்து குளிரில் விறைக்கும் பாதங்கள்போல் மனதும் மரத்துபோகும். ஆனாலும் இழுத்து இழுத்து நடந்தேன் எங்காயவது எங்கேயாவது ஒரு நதியின் கரைகிடைக்கும் என்ற நம்பிக்கையோடு.

அகதிவாழ்க்கை என்வீட்டுக்கு பின்புறத்தில் யாருக்கும் தெரியாத ஆற்றைத்தான் ஓடவிட்டது. போர்க்காலத்து பாழடைந்தவீடும்;, சிறுவயதில் அக்காவுக்கு அளவில்லாத சட்டையைதந்தாலே அழுது அடம்பிடிக்கும் எனக்கு முகம் அறியாத வெள்ளையர்களின் பழைய உடைகளும், மணி அடிக்கும்பொழுது வரிசையாக பிச்சைக்கு நிற்பதுபோல் நின்று வாங்கும் உணவும் அந்த ஆற்றின் நீரை அதிகப்படுத்தியது. ஏதோ இவர்களின் எச்சில் பாத்திரம் கழுவுவதற்கும் குப்பைகளை துப்பரவு செய்வதற்காகவும் சாபம்பெற்று பிறந்தவள்போல் என்னை சபித்த மந்திரவாதியும் மந்திரக்கோலை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கின்றான்.
6
நானும் சாபவிமோசனம் பெறுவதற்காய் அந்த மந்திரவாதியை தேடிக்கொண்டே இருக்கிறன். என் எல்லாக் கனவுகளும், அந்த நிலாக்கால நினைவுகளும் இந்த கடல் தாண்டிய பயணத்தில் புதைந்து போய்விடுமென நான் நினைத்தே பார்க்கவில்லை. அவைகளை நான் எங்குபோய் தேடுவேன்.? இப்படித்தான் எல்லாரும் எதையாவது தொலைத்துவிட்டு தேடிக்கொண்டே இருக்கிறார்கள். தேடல் ஒரு முடிவிலி.


தொலைந்த அத்தனையும் கிடைத்துவிட்டால்.... என்ரை அம்மாவின் விரலோடு கடைசிநேரம் மட்டும் இருந்த எழுத்து மோதிரம் இப்ப என்ரை விரலில. அதை தடவும் போதெல்லாம் சின்ன வயதில படித்த அலாவுதீன் கதைதான் நினைவில்வரும் அதில வாறமாதிரி ஒரு பூதம்வந்து என்ன வேண்டும் எண்டு கேட்டா எல்லாவற்றையும் என்ரை அம்மாவோடு வாழ்ந்த அந்த சின்னப்பருவம், யாழ்தேவிபோல் நீண்டு கொண்டே போகும் என்ரை குஞ்சு அம்மான்ரை அந்த அழகான வீடு;, சின்ன மழைக்கும் நிறைந்து வழியும் அந்த சின்னக்கிணறு, மழைக்காலம் வந்துவிட்டால் சாமிநாதனிடம் கொப்பி தாள்களை கிழித்து நானும் அக்காவும் கால்களை கீறி கொடுத்துவிடுவோம் எனக்கு பிடித்த சிவப்பு நிறத்திலும் அக்காவுக்பிடித்த பச்சை நிறத்திலும் மிதியடி கட்டை வந்துவிடும். அதைபோட்டபடி முற்றத்தில் ஓடும் வெள்ளமெல்லாம் நடந்துதிரிவம் பிறகு இரவில கால்; கடிக்கத்தொடங்கிவிடும் அதற்கும் சாமிநாதன்தான் வேப்பம்கொட்டை புகைபோட்டு அக்காவையும் என்னையும் கதிரையில இருத்திவிட்டு புகைகாட்டுவார். எதைவேண்டாமென்று சொல்ல முடியும்? எல்லா நினைவுகளையும் என்னுள் சுமந்தபடி பனிபடர்ந்த பாதையெல்லாம் நடந்து நடந்து பாதைகள் நீண்டதே தவிர என் நினைவுகள் விழுந்து கிடக்கும் எந்த இடத்தையும் பார்க்க முடியாமல் எல்லா பாதைகளும் மூடப்பட்டுக்கிடந்தன. என் அம்மாவின் உடலை எரித்த அந்த இடம், என் நினைவுகளை தன்னுள் புதைத்து பெருமூச்சை விட்டு பின் நினைவுகள் மங்க மங்க விழித்து விழித்து என்னை தேடிய விழிகள் நிரந்தரமாக மூடிய அந்த கடைசி அறையை பார்க்கும் அந்த நிமிடங்களுக்காக உயிர்வாழலாம் என்ற என் வலிகளை எந்த கவிஞ்சானாலும் கவிவடிக்கமுடியாத வலிகள் அவை.......
7
வீடு செல்லல் நினைத்தே இராத நாளொன்றில் நடந்து முடிந்துவிட்டது. இனி பார்ப்பேனா என்று ஏங்கிய அத்தனையும் பார்க்கபோகின்றேன் என்ற நினைப்பு அப்போது மனதை நிறைத்து மகிழ்வை தந்தாலும் நாடு கடத்தல் அதுவும் ரவி இல்லாத பொழுதொன்றில் நடந்தேறியது அழமுடியாத அதிர்ச்சியாக இருந்தது. நானும் பிள்ளைகளும் என்ன செய்யப்போகின்றோம்? என்ற கேள்வி மட்டும் நீண்டு கொண்டேபோனது. ஆனால் தெருக்கள் மட்டும் சுருங்கி சிறுத்துபோய் கிடந்தன. முன்பெல்லாம் பொண்ட் ரீயுட்டரிக்கும், றிமகோலுக்கும் சைக்கிளில் போகும் பொழுது ஏதோ நீண்ட தூரம் போவதுபோல் இருக்கும். செந்தில் மாஸ்ரர் பொருளாதார வாகுப்பு எடுக்க முதல் போய் சேரவேண்;டும் எண்டு எப்படி அவசரமா போனாலும் பிந்திவிடும். ´ஹநான் வகுப்புக்கு வந்தாப்பிறகுதான் நீர் வருவீராக்கும´; எண்டு சொல்லி அவரும் களைச்சுபோய்விடுவார். ஆனா இப்போ பஸ் நிலையத்திலிருந்து எங்கட ரோட்டுக்கு வர ஜந்து நிமிடம் போதும்போல் இருந்தது.எல்லாமே ஒரு குச்சு ஒழுங்கைபோல் இருந்தது.

எங்கு பார்த்தாலும் பச்சை மயம் இதுதான் எங்கள் ஊரின் நிறமோ என நினைக்கவைத்தது. பச்சை வாகனம், பச்சை உடை, பச்சை தொப்பி பச்சை நிறத்தை என்னை அறியாமல் மனம் வெறுக்கத்தொடங்கியது . ஏதோ ஒரு அன்னிய நாட்டுக்குள் நடப்பதுபோல் மனம் படபடத்தது. பிள்ளைகள் ஏதும் அறியாது சிரிப்போடு எல்லாவற்றையும் ரசித்தார்கள். பச்சை தொப்பிக்குள் மறைந்து கிடக்கும் அந்தக்கண்களை நேருக்கு நேராக பார்ப்பதை தவிர்த்தபடி நகர்வது சிறுவயதில் விளையாடிய கிளித்தட்டைத்தான் நினைவுபடுத்தியது. கிளி கடைப்பிள்ளையார் கோவில் ஒலிபெருக்கியிலிருந்துவரும் எம்.ஜியாரின் பாட்டை முனு முனுத்தபடி எங்களை கவனிக்காதுபோல் நிற்பார். நாங்களும் கிளியின்ர கண்களையே பார்த்தபடி மெல்ல அடுத்த கோட்டுக்குள் தாவுவோம் அப்ப பார்த்து முதுகில் ஒரு அடிவிழும் கிளியாக அடிக்கடி ரஞ்சன்தான் வருவான். அந்த வலிமாறமுதல் திரும்பவும் விட்ட இடத்தைபிடிக்க முயற்சி செய்வோம். சிறுவயது விளையாட்டுக்கள் வாழ்க்கையோடு ஒத்துநடந்தபடி இருப்பதை நினைக்க ஆச்சரியமாக இருந்தது. ஜேர்மனில் ரஞ்சனையை சந்தித்தபொழுது அவனும் இப்படித்தான் சொன்னான்.
8
ஒரு நாள் அதிகாலை எல்லோரையும் சந்திக் காம்புக்குவரும்படி ஒலிபெருக்கியில் அழைத்துவிட்டு வரிசையாக நிற்கவைத்து கண்ணைகட்டிவிட்டு இழுத்து செல்லும்போது எவடம் எவடம் புளியடி புளியடி விளையாட்டு நினைவில்வந்து அந்த நிலையிலும்தான் சிரித்து அதற்கும் அடிவாங்கியதாக சொல்லிச்சிரித்தான்.


எனது வீடு என் பிள்ளைகள் நித்திரைகொள்ளும்வரை வாய் ஓயாது சொல்லி சொல்லி மகிழ்ந்த என்ரை அம்மான்ரவீடு தன் முகம் இழந்து நின்ற காட்சியைக்கண்ட பிள்ளைகள் ஏமாற்றத்தோடு என்னைப் பார்த்தார்கள். என்னால் அழமட்டும்தான் முடிந்தது. இடிபாடுகளுக்கிடையிலும், பத்தைகளுக்கிடையிலும் சிக்குண்டு கிடக்கும் என்ரை அம்மான்ர வீடும் என்னைப் பரிதாபமாக பார்த்தது. சிலநேரம் வீட்டுக்கும் என்னை அடையாளம் தெரியேல்லையோ? இல்லையே சந்தியில வாசுகி கண்டிட்டு நான் அப்பிடியே இருக்கிறன் எண்டுதானே சொன்னவள். வீடு என்னோடு கதைத்தது. அதன் குரல் மட்டும் மாறமல் அப்படியே இருந்தது. வீட்டிடம் கேட்பதற்கு நிறைய கதைகள் இருந்தன என்ரை அம்மாவை பற்றின கதைகள் நிறைந்துபோய் கிடந்தன. இவைகளுக்குள்ள இருந்து இந்த வீட்டை எப்படி வெளியில எடுக்கப்போகிறன்? முன்பும் இப்படித்தான் சிரித்த முகங்களோடிருந்த எங்கட தெரு வீடுகளின் மேல் மரணநிழல்கள் படரும் நிலை வந்தபோது உயிர்களை பிடித்தபடி சமைத்த உணவு ஆறுமுன் திறந்த கதவுகளை மூடமறந்து ஓடினோம் எம்முதுகளின் பின் அன்னிய மொழிகளின் கூக்குரலும் எம் மொழிகளின் அலறலும் கேட்டபடி இருந்தது விரைவாக ஓடினோம். துயர்பெருகி நெருப்பொன்று மனதினுள் எழ ஒரு கணம் மூச்சு வாங்க முகங்களை திருப்பிய பொழுது ஓலம் எழும்பிய குரல்களோடு கரும்புகையும் சேர்ந்து பரவின அக்காட்சி கண்களில் இப்பவும் விரிந்துகொண்டே போனது. பின் ஒரு நாள் வீட்டுக்கு திரும்பிய பொழுது வீட்டைப்பார்த்து அம்மா அழுத அழுகை. எல்லா நினைவுகளும் அம்புலிமாமாவில் வாசித்த சிந்துபாத் கதையில்வந்த முதுகைவிட்டு இறங்காத கிழவன் மாதிரியெல்லாம்.......

நாலுபக்கமும் மதில்களும் வேலிகளும் உடைத்தும் வெட்டியும் விழுந்துகிடந்தன. ராகினிவீடும், லலிதாவீடும், பின்வீட்டு கமலராணிவீடும் ஒரே வளவுக்குள் இருப்பதுபோல் எந்த வளவுக்கும் எல்லையும் இல்லை. பொட்டுக்களும் இல்லை.
9
முன்பெல்லாம் வேலிக்குப் பொட்டுவைப்பது ஒரு உறவுப்பாலம்போல இருந்தது. எங்கட வீட்டு பொட்டால் புகுந்து ராகினிவீட்டுக்குபோய் பிறகு ராகினிவீட்டு பொட்டால்போனால் பின்வீட்டு ராணி அக்காவீட்டுக்குபோய் ஆஸ்பத்திரி ரோட்டுக்கு போயிடலாம். ஆரு போனாலும் ஆரது எண்டு கேட்பினம் பெயர் சொல்லவே தேவையில்லை அது நான் எண்டால் காணும் அம்மாவும் ஆ பரமேஸ்வரியே எண்டு கேட்பா நாங்களும் பலகைகட்டையை பிள்ளை எண்டு தூக்கிக்கொண்டு பொட்டுக்குள்ளாலையே போய்வருவம். இரவு படுக்கப்போவதற்கு முதல் சரியா எட்டுமணிக்கு ராகினி, கமலா, நாளாயினி, சீனி அக்கா நான் எல்லாரும் அந்தப்படியில பொன்னுக்கோனுக்காக காத்திருப்பம். பெயரைப்போலவே வித்தியமான மனிதர். தன்ரை படத்துக்கு சிதம்பரத்தம் பூவைத்து குற்றாயினவார் எண்ட தேவரத்தை பாடுவார். இரவு எங்களுக்கு கதைசொல்லி அவர்தான். எப்பபார்த்தாலும் ஆனைக்கோட்டைக்கு வில்லுவண்டில் பூட்டி நல்லெண்ணை வாங்கபோற கதையைத்தான் மாற்றி மாற்றி சொல்லுவார். அப்பவெல்லாம் ஆனைக்கோட்டைக்கு போய்வர இரண்டு நாள் பிடிக்குமாம்.

´´ஏன் பொன்னுக்கோன் நாங்கள் அத்தானின்ட காரில மானிப்பாய்க்கு போகேக்க ஆனைக்கோட்டை டக்கெண்டு வருகிது´´? ´´எண்டு கேட்டா இப்பமாதிரி றோட்டே அப்ப இருந்தது´´ சரி என்னத்தில விட்டனான் சரியா பன்னிரண்டு மணிக்கு சலங்கை சத்தத்தோட மோகினி பிசாசு வரும் நான் உடன வேட்டியை களற்றி தலைப்பாகை கட்டின மோகினி பிசாசு மறைஞ்சிடும் எண்டு சொல்லி முடிப்பார். எத்தனை தரம் கேட்டாலும் அலுக்காத கதை ஆனா கதை முடிய அம்மாவை பின் லையிற்றைபோட்டிட்டு பொட்டுக்குகிட்ட வாங்கோ எண்டு அழுது கொண்டு நிற்பம். றோட்டால போற வேலையும இல்லை. அதுவே பிறகு ஆமிக்கு பிடிபடாமல் திரியிறதுக்கும் நல்ல விஷயமா இருந்தது. அடிவளவு வேலி அடைக்கிற நாளெல்லாம் ராகினியின்ர அம்மா வேலிஅடைக்கிற திருநாவுக்கரசோடே சேர்ந்து கதியாலை கொஞ்சம் கொஞசமா எங்கட வளவுக்க வைப்பா அப்ப அக்காவும் நானும் அம்மாட்ட ஓடிப்போய் சொல்லுவம். அம்மா சொன்னவ மகேஷ்போகேக்க கொண்டா போகப்போறா?. இப்ப வீட்டை வித்துப்போட்டு ராகினிவீடு கனடாவுக்கு போயிட்டினம். அமுதக்கா பிரான்ஸ்சுக்குப் போயிட்டா. கமலராணிவீடு எங்க போயிருப்பினம்.?
10
அவையின்ர கிணத்துக்கட்டு வெறுமையாகக் கிடந்தது. எல்லா முகங்களையும் அந்தந்த இடத்தில் நிற்கவைத்துப் பார்க்கச் சிரிப்புத்தான் வந்தது. முன்பு சரியா ஏழுமணிக்கு பிறந்தநாள் வாழ்த்து தொடங்க போடுற றேடியோ இரவின்மடியில் மட்டும் பாடிக்கொண்டே இருக்கும். பொங்கும் பூம்புனல் தொடங்க நாங்களும் வீட்டுக்கும் கிணற்றடிக்குமாய் ஓடத்தொடங்குவம். நாங்கள் குளிக்கிறதையும், முகம் கழுவுறதையும் பார்க்கிறதுக்காக இந்தக்கிணற்றுகட்டில ஏறிநிற்கிற கண்ணன், முகுந்தன் ஆரையும் காணவே இல்லை எந்த ஜரோப்பாதெருவெல்லாம் அகதியாய் அலைகிறார்களோ? ராகினிவீட்டிலும் புதுமுகங்கள் எல்லா உறவுகளும் தொலைந்திருந்த ஊரில் நிழலைக்கண்டால் கூட பயமாக இருந்தது. ஆனால் ஒழுங்கைக்குள்ள தனந்திரனைம், வாசுகியையும் கண்டவுடன் சந்தோஷமாக இருந்தது. தனேந்திரன் எல்லாவற்றாலும் மாறியிருந்தாலும் குதிக்கால் நிலத்தில் படாமல் இப்பவும் தொங்கி தொங்கி நடந்துதிரிவதை பார்க்கும் பொழுதெல்லாம் சின்ன வயது நினைவுகள்எல்லா இடங்களிலும் விதைத்துபோய் கிடந்தன. எத்தனை நினைவுகள் எவ்வளவு சந்தோஷம் நிறைந்த வாழ்க்கை அது. எல்லாவற்றையும் இழந்து ராகினி வீட்டில் புதுக்குழந்தைகள் நாங்கள் விளையாடித்திரிந்த அதே இடத்தில் பிளேன்கோடு கீறி றைட்டோ எண்டு கேட்க என்னுடைய பிள்ளைகள் முள்ளி (அவுட்) எண்டார்கள்.


வாழ்க்கையில் பல பக்கங்களை கறையான் அரித்துவிட்டிருந்தது. ஆனாலும் அவற்றை எடுத்து தூசிதட்டி பார்க்க மனம் தூண்டிக்கொண்டே இருந்தது. அடிவளவில் போய் நின்றால் பண்ணை பாலத்தில் வாகனங்கள் போகும் பொழுது ஒரு சத்தம் கேட்கும் அம்மாவோடு படுத்திருந்து எத்தனை வாகனம் போனது எண்டு எண்ணியபடியே நித்திரை ஆகிவிடுவேன். அந்த சத்தத்தை இப்ப இரவில கேட்க பயமாக இருக்கிது. வெளிநாட்டில் பத்துமணிக்கு பிறகு வீடுகளுக்குள் நடந்தாலே கீழ் வீட்டுக்கு இடைஞ்சல்வந்துவிடும் எண்ட பயத்தில் முயல்மாதிரி பூனைமாதிரி நடக்கும்பொழுதெல்லாம் இரவிரவாக கடைப்பிள்ளையார் கோவில் திருவிழாவில் சங்கர் ஜயரின் பிள்ளைகள் மருதமலை மாமணியே முருகையா எண்டும் யாருக்காக இது யாருக்காக எண்டும் பாடிறது யாழ்ப்பாணம் முழுக்க கேட்கும். இந்திரா, கலா பிறேமக்கா எல்லாரும் இப்ப பிள்ளையார் கோவில் படியில இருந்து நாடியில கையைஊண்டிக்கொண்டு கேட்டுக்கொண்டு இருப்பினம்.
11
சிக் இந்த ஜயா என்னை விடமாட்டார் எண்டு கவலைப்பட்டுக்கொண்டு படுத்திருக்க விடிஞ்சிடும். திருவிழா இல்லாத நாளில ஆடிக்காத்துக்கு கற்குளத்தில விண்கட்டி போட்டிக்கு பறக்கவிடுற எட்டுமுள பட்டம், பாம்பு பட்டங்களின்ற விண்சத்தம் கேட்டபடி இருக்கும் ஒண்டுமே இல்லாட்டி ஆட்டுக்காற கோபலும் சறோவும் சவுந்தர்ராஜன், சுசிலா மாதிரி மாறி மாறி பாட்டு பாடுவினம் இவைகளை கேட்டபடிதான் அந்த தெருவே நித்திரை கொள்ளும். கொட்டடி நமச்சிவாய பள்ளிக்கூடத்தில மணிச்சத்தம், தேவாரம் பாடுறசத்தம், பாண்வருகிது பாண்வருகிது எண்டு குழந்தைகளும் காகங்களும் கத்தி கரையும் எந்த சத்தத்தையும் காணவே இல்லை. எல்லா குழந்தைகளின் சங்கீத குரல்களெல்லாம் எங்கேயோ தொலைந்துபோயிருந்தன வெறுமை எங்கு பார்த்தாலும் வெறுமையும் தூரோகமும்.பரந்து போய்கிடந்தன. மனிதர்கள் மட்டுமா எங்களுக்கு தூரோகம் செய்கிறார்கள்.? நாங்கள் நம்பியிருந்த வில்லூண்டி பிள்ளையாரும், ஜயானரும், வைரவரும், நல்லூர் முருகனும் சேர்ந்து தூரோகம் செய்துவிட்டார்கள். எங்கேயாவது ஒரு மூலையில் போயிருந்து அழவேண்டும்போல் இருந்தது. எந்த மூலையை பார்த்தாலும் ஏதோஒரு நினைவு அல்லது ஏதோ ஒரு குரல் கேள்வி கேட்டபடியே இருந்தது. றைட்டோ பிள்ளைகள் விளையாடிபடியே இருந்தார்கள்.

எப்போதும் என் கனவுகளை ஏதாவது ஒரு துப்பாக்கி சத்தம் கலைத்தபடியே இருக்கும். சத்தத்தை கேட்டவுடன் நெஞ்சு படபடத்தது. ஜயோ என்ரை பிள்ளைகள் எண்டு கத்திக்கொண்டு ஓடினேன் பக்கத்து வீட்;டு முற்றத்தில் ஒருவரையும் காணவில்லை. இவர்கள் மட்டும் கீழே கிடந்த குருவியை பார்த்தபடி இருந்தார்கள். எனக்கு என்ன செய்வது எண்டே தெரியவில்லை. என்னைக்கண்டவுடன் அவர்கள் அழத்தொடங்கிவிட்டாhகள். அம்மா அம்மா அந்த மாமா அவர்தான் அம்மா இந்த போகலை ( பறவை) சுட்டவர். எனக்கு எரிச்சலாக இருந்தது. இவனை என்ர பிள்ளைகள் மாமா எண்டு நினைக்குதுகளே. கடவுளே இவர்களைப்பற்றி எதுவும் அறியாத இந்தக்குழந்தைகளுக்கு எப்படி சொல்லுவன்? எந்த மொழியில் சொல்லி விளங்கப்படுத்துவன்? இரவுமுழுவதும் பிள்ளைகள் அந்தக்குருவியைப்பற்றியே கதைத்தபடி இருந்தார்கள். அது இன்னொரு குருவியோட சேர்ந்து எங்கட மாமரத்தில வீடு கட்டிக்கொண்டிருந்ததாக சங்கீத சொல்லிக்கொண்டே இருந்தாள். பாவம் அது ஒவ்வொரு தடியாய் கொண்டுவந்;தது நானும் பார்த்தனான் எண்டு சுமி சொல்லேக்க அவளின்ர கண்கள் கலங்கியிருந்தன.
12
விடிந்ததும் ஒண்டுமே நடக்காததுபோல எங்கட செவ்விளனி மரத்தில ஓலைபிடிங்கி நாக்கு வழித்துக்கொண்டிருந்தான். இவன்தான் பொல்லாதவனா இருக்கவேணும். ஜயாவும் சாமிநாதனும் இந்த மரங்களை நடவும் வளாக்கவும் பட்டபாடு எவ்வளவு குப்பைகள் சாணி எண்டு உரம்போட்டு பார்த்து பார்த்து வளர்த்தவை. இவன் ஏதோ தன்ரை முப்பாட்டன் நட்ட மரம்மாதிரியெல்லோ நினைக்கிறான். ஒரு நாளைக்கு ஒரு ஓலையெண்டு பார்த்தாலும் முப்பது ஓலையை அனியாயமாக்கிறான். மரத்தை மட்டுமல்ல எங்கட எல்லாம் தங்களுடையது எண்டுதானே சொல்லினம் இவன் நாக்கு வழிக்கிற மாதிரி மனதில இருக்கிற அழுக்கையும் வழிச்சால் எவ்வளவு நல்லா இருக்கும். மற்றவன் நான் பார்க்கிற நேரமெல்லாம் மெல்லிசா சிரிப்பான். பிள்ளைகளோட கையைக்காட்டி கையக்காட்டி கதைப்பான். இந்தப்பிள்ளைகளுக்கு சொன்னாலும் விளங்குதில்லை. அந்த சனியன்களுக்கு கிட்ட போகவேண்டாம் எண்டு சொன்னாலும் கேட்கிதுகள் இல்லை. அண்டைக்கும் இப்பிடித்தான்; முற்றவெளி முனியப்பர்கோவில், நூல்நிலையம், நான்படித்த றிமகோல், பூங்கா எண்டு ஒவ்வொன்றா காட்டிக்கொண்டு வரும் பொழுது திடீரென்று எப்படி முளைத்து வந்தார்களோ பச்சை பிசாசுகள் எலும்புமட்டுமே உள்ள உடம்பை அதுவும் இல்லாததுபோல் வளைத்தும் மடித்தும் பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். மனிதர்களின் மறுபக்கத்தை அறியாத பிள்ளைகள் எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கவேண்டும் எண்டு அடம்பிடித்தார்கள். வீட்டுக்குபோனாலும் தெரியாத மனிதர்கள் எதையும் பகிர்ந்து கொள்ள பயமாக இருந்தது. கடவுளே ரவியும் இல்லாமல் இந்தப்பிள்ளைகளோட நான் என்ன செய்யப்போகிறன்.? இண்டைக்கு எப்பிடியும் இதைப்பற்றி ரவியோட கதைக்கவேணும்.


பயம்மட்டுமே நிறைந்த வாழ்க்கை இது என் வீடுதானா? எண்ட சந்தேகத்தையும் எழுப்பிக்கொண்டிருந்தது. என்னோடையே எப்பவும் வாழ்ந்து கொண்டிருக்கும் என்ரை தொலைந்துபோன வீட்டை நான் தேடிக்கொண்டே இருந்தன். எல்லா வீட்டின் மூடின கதவுகளும் என்னை பயப்படுத்திக்கொண்டே இருந்தன. வெளிநாட்டிலும் மூடின கதவுகளை பார்க்கும் பொழுதெல்லாம் சின்னவயதில் படித்த சுகாதார புத்தகத்தில் காலை எழுந்தவுடன் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு மூடின யன்னல்களை திறந்தபடி முதுகாட்டிய ஒரு அம்மாவின் படம் நினைவில் வரும்.
13
இப்படித்தான் எதை பார்த்தாலும், கேட்டாலும் எல்லா நினைவுகளும் ஓடிவந்து முன்னுக்கு நிற்கும். எல்லாத்தையும் மறக்கவேணும் மற மற எண்டு மனம் சொன்னாலும் எதை மறக்கிறது? இந்த வீட்டில என்ரை அம்மாவோடு வாழ்ந்த வாழ்க்கையையா? அல்லது ஜேர்மனியில் வாழ்ந்த வாழ்க்கையையா? எதை மறக்கிறது எல்லா நினைவுகளும் என்னை துண்டு துண்டாக உடைத்தெறிந்து கொண்டிருப்பதை தவிர வேறு எதுவும் செய்வதாக தெரியவில்லை. வாசுகியோடு சோந்து கொட்டடி சந்தியிலிருந்து பொன்னுத்துரை வீடுமட்டும் நடந்து ஒவ்வொரு வீட்டையும் பார்த்தபொழுது இந்த வீடுகளெல்லாம் எத்தனை தலைமுறைகளின் சிரித்த முகங்களை மட்டும் பார்த்து பழக்கப்பட்ட வீடுகள். இது எங்கட மாமிவீடு;, இதுவும் மாமிவீடு இது ஜெயாஅண்ணன் வீடு, முன்வீட்டு அன்ரி வீடு ரோசாப்பூவை பிச்சா அடிப்பன் எண்டு கத்திற சுப்பிரமணி அண்ணையின்ர குரலும். த பலன்ஸ் சீற் எண்டு இங்கையும் அங்கையும் நடக்கிற மீனாட்சி ரீயூட்டரி சத்திய மூர்த்தி மாஸ்ரின் எல்லா குரல்களும் அங்கேயே உறைந்து போய் கிடந்தன. எந்த மூலையை பார்த்தாலும் ஏதாவது ஒரு நினைவு எழுந்தபடியே இருந்தன. சந்தியில் இருக்கும் கோடலிகந்தையர் வீட்டு அத்திமரம் முன்புபோலவே அத்திக்காய்களை றோட்டெல்லாம் பரப்பிவிட்டிருந்தது. லைடன் காமன்ஸ் பனியனும் கால்மேசும் அவித்த தண்ணி குளோறின் மணத்தோட ஓடின வாயக்கால் வறண்டுபோய் கிடந்தது. குளோறினைப்பற்றி விளங்காமல் கொட்டடி பள்ளிக்கூடம் விட்டுவரும்பொழுதெல்லாம் அந்த தண்ணீருக்குள் கால் அளைந்து விளையாடமல் வீட்டுக்கு வருவதே இல்லை.

பள்ளிக்கூடத்து மூலையில அந்தமாமரம் அப்படியே நிண்டது. அந்த மரத்துக்கு கீழே சிவஞானம் ரீச்சர் கதிரைபோட்டிருந்து கொண்டு கேள்வி கேட்பா நாங்கள் மாமரத்தில இருந்து குருவிச்சை விழுமா எண்டு அண்ணாந்து பார்த்துக்கொண்டிருப்பம். இங்கதான் இதிலதான் கொடிவிழாவுக்கு கொடியேற்றி பத்துசதத்திற்கு கொடிவாங்கி சட்டையில குத்திறதும். அதோடசேர்த்து அம்மா சட்டையை தோய்த்தற்கு அழுத அழுகையையும் இப்பொழுது நினைக்க சிரிப்புத்தான் வந்தது. வாசுகி எனக்கு மனோரஞ்சிதப்பூவை பிடிங்கி கைக்குள்வைத்தாள் என்ன பழம்? எண்டு கேட்க ம் பாலப்பழம் கண்ணை மூடி பாலப்பழத்தை நினைத்தேன் என்ன ஆச்சரியம் அதே மணம் மணக்கத்துடங்கியது. இந்த மனோரஞ்சிதப்பூவை எப்பவும் கைக்குள்ளவைத்திருக்கிற கனகாம்பி, யோகாம்பி அவையின்ர அண்ணா எல்லாரும் எங்க வாசுகி இருக்கினம்?
14
அவை பிரான்ஸ்சில எண்டு நினைக்கிறன். சீனிவாசகம்றோட், ஆஸ்பத்திரிறோட் எண்ட விலாசம் எல்லாம் மாறி பிரான்ஸ், ஜேர்மன் ,லண்டன் எண்டு மாறிப்போய் கிடந்தது. எல்லாமே மாறித்தான் போய்விட்டது. ஆனால் எந்த மாற்றமும் இயற்கையாக நடக்கவில்லை. அடுத்தவீட்டில் எது நடந்தாலும் எதுவுமே நடவாதமாதிரி மௌனமாக இருப்பவர்களை பார்க்கும் போது எரிச்சல் எரிச்சலாக வந்தது. மிகச்சிறுமியாக இருந்தபொழுது லேக்கவுசில் வேலைபார்க்கும் யோகாம்பியின் அண்ணா ஒரு நாள் அழுது கொண்டு இருந்தார். அப்பொழுதுதான் கெந்தி கெந்தி சைக்கிள்பழகும் காலம். உங்கட அண்ணா ஏன் அழுகிறார்? அண்ணாத்துரை செத்துப்போயிட்டாராம். அவர் உங்கட புங்குடுதீவில இருக்கிற சொந்தக்காரரா? இல்லை இந்தியாவில இருக்கிறவராம். அதுக்கேன் உங்கட அண்ணா அழுகிறார்? அழுதோம் யார் செத்தாலும் அழுதோம். நாய் செத்தாலும் அழுவோம், காகம் செத்தாலும் பாவம் எண்டுதான் சொல்லுவம். எல்லாம் மாறித்தான் போயிற்றுது வாசுகி. அவள் ஏனோ மௌனமாக வானத்தைப் பார்த்தாள்.

வரும் வழியில் பச்சை பிசாசுகளின் கூட்டம் தெருவை மறித்து நின்றது. பிள்ளைகள் இப்போது என்கைகளை இறுக்கிப் பிடிக்கத்தொடங்கிவிட்டார்கள். நானும் வாசுகியின் கையை இறுகப்பிடித்தேன். அவளின்கை ஈரமாகிக்கொண்டு வந்தது. எலும்புக்கூடுகள் அடுக்கப்பட்டுக்கிடந்தது இதில் தன்னுடைய கணவரினது எதுவாக இருக்கும?; என்று தடுமாறிக்கொண்டிருந்த பெண்ணைப்பார்க்க பாவமாக இருந்தது. இவையள் எப்பிடி செத்திருப்பினம்.? சாப்பிட்ட சோறு தொண்டைக்குள்ள இறங்க முதல் இழுத்திட்டு போய்சுட்டிருப்பாங்கள், இல்லாட்டி போயிற்றுவாறன் எண்டு தானும் நம்பி மனைவியையும் நம்பவைத்திட்டு போகேக்க, விட்டிட்டு போன வீட்டை பார்க்க வரேக்க ஏதோ ஒன்று நடக்கேக்க எல்லாவற்றையும் பார்த்தபொழுது தலை சுற்றியது. அழுகை அழுகை எங்கு பார்த்தாலும் அழுகை. நெஞ்சு படக் படக் என்று அடிக்கும் சத்தம் வெளியில் கேட்கும்போல இருந்தது. சரி போகலாம் எண்டு சொல்லும் மட்டும் பயம். பிள்ளைகளின் கண்களில் சிரிப்பு மறைந்து மெல்ல பயம் படரத்தொடங்கிவிட்டது. சிலவேளைகளில் போகச்சொல்லிவிட்டு கடவுளே எண்டு நினைத்து ஒரு அடிவைப்பதற்கிடையில் திரும்பவும் கூப்பிடும்போது முன்பு நானும் அக்காவும் தும்பிபிடிப்பதற்காக பாம்ஸ் மரத்துக்கு அடியில பதுங்கியிருப்பம். பிறகு அதின்ர வாலில நூலை மெல்லிசா கட்டியிற்று பறக்கவிடுவம்.
15
அதுவும் புழுகத்தோட பறக்கும். கொஞ்சத்தூரம் பறக்கவிட்டிட்டு திரும்பவும் இழுப்பம். சில நேரங்களில விரலில ஊண்டி கடிச்சிட்டு நூலோடேயே பறந்துபோயிடும். அந்த நினைவுதான் வந்தது. இன்பம் மட்டுமே நிறைந்து கிடந்த பெருவெளிகளின் ஒவ்வொரு துகள்களுக்குள்ளும் எத்தனையோ கதைகள் புதையுண்டுபோய்க் கிடந்தன.

திரும்பவும் மாமரத்தில் குருவிகளின் சத்தம் கேட்கத்தொடங்கிவிட்டது. சங்கீதாவுக்கும் சுமிக்கும் ஒரே சந்தோஷம். அம்மா அம்மா அங்க பாருங்க திரும்ப கூடு கட்டிட்டினம். பிள்ளைகளின் சிரிப்பையும் கூட்டையும் முறைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தான். அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஏதோ ஒரு பயமும் படபடப்பும் வந்துகொண்டே இருக்கும். யாரோடு இதைப்பற்றி கதைப்பது. வாசுகி வீட்டுக்கு போனபின் பழையபடி தனிமை பயம் ரவியோடு கதைக்கவேண்டும். ஆமிக்காரர் ஏன் நெடுக எங்களை மறிக்கினம்?, எலும்புகூடுகளை பார்த்து அவைஏன் அழுதவை? நித்திரை கொள்ளும் மட்டும் கேள்விகளை அடுக்கியபடியே இருந்தாள் சுமி அந்தக்குருவிகளுக்கு பெயரும் வைத்துவிட்டாள். அப்பாட்டை சொல்லி குருவிகளுக்கு சாப்பாடு அனுப்பச் சொல்லவேணும் சங்கீதா ஏதோயோசித்தபடி இருந்தாள். அவளிடம் சின்னதா ஏதோ மாற்றம் தெரிந்தது. ; எப்ப அம்மா விடியும்? குருவிகளைப் பார்க்கவேணும் எண்டபடீயே சுமி நித்திரை கொண்டுவிட்டாள்.

மரணம் பற்றிய கற்பனையும் எதிர்பார்ப்பும் எவ்வளவு பயங்கரமானது என்பதை அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். ஏதோ நடக்கப்போகிறது நடக்கப்போகிறது எண்டு மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. சங்கீதாவைப் பார்த்தேன் அழுதுகொண்டு படுத்திருந்தாள். ஏன் குஞ்சு அழுகிறீங்க எண்டு கேட்டவுடன் என் நெஞ்சோடு தன் முகத்தை வைத்து இறுக்கிகட்டிப்பிடித்தாள். அவளின் உடம்பு நடுங்கியபடி இருந்தது. கடவுளே நான் என்ன செய்ய? பயத்தை வெளிக்காட்டாமல் தடவிக்கொண்டிருந்தேன். எப்ப அம்மா நாங்கள் அப்பாட்டை போறது? சூல ( பாடசாலை ) தொடங்கப்போகிது. கேள்வி தொங்கியபடி நின்றது.
16
வெளியில் விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகள் கத்திக்கொண்டு வந்து என்னை கட்டிப்பிடித்து அழுதார்கள். எனக்கு என்ன செய்வது எண்டே தெரியவில்லை. . ´´என்ன என்ன குஞ்சுகள்?. அம்மா அம்மா போகல் எண்டு விக்கினாள்´´ சுமி. அங்கே அந்தக்குருவிகள் மாமரத்துக்கு கீழே அண்ணாந்து படுத்துக்கிடந்தன. பார்த்து பார்த்து நம்பிக்கையோடு கட்டின அந்தக்கூடும் பிய்த்து எறியப்பட்டு கிடந்தது. நான் அவர்களை பார்த்தபொழுது அவனின் சிரிப்பு எனக்கு பலதையும் விளங்கப்படுத்தியது. மற்ற ஆமி என்னைப் பார்ப்பதை தவிர்த்துக்கொண்டிருந்தான். பக்கத்துவீட்டுப்பிள்ளைகள் விளையாடத்தொடங்கிவிட்டார்கள். சங்கீதா என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். ´´குஞ்சு அப்பாவோட கதைச்சனான்´´. என்ன என்பதுபோல் நிமிர்ந்து பார்த்தாள். அப்பாவுக்கு லண்டனில் எல்லாம் சரிவந்திட்டுதாம்.

எங்கட ஜேர்மன்?

எங்கட ஜேர்மன் அவளின் கேள்வி என்னை என்னவோ செய்தது.

அம்மா எண்டாள்.

ம்

சொல்லுங்கோ

நாளைக்கு நாங்கள் கொழும்புக்கு போறம்.

ஏன்?

அப்பாட்டை போறம். ராகினி வீட்டில் பிள்ளைகள் ரைட்டோ? எண்டு கேட்டார்கள். சுமி விறாந்தைப் படியில் நிண்டுகொண்டே முள்ளி என்றாள் சத்தமாக.

2 comments:

  1. தனது சிறுவயது நினைகளுடன் , புலம் பெயர்ந்த வாழ்வின் அவலங்களையும் , நிலமைகளையும் மனதின் முன் நிறுத்தி அருமையாக அடைமொழிகளுடன் கூடிய சொல்லியங்கள் வைத்து இக்கதை நிறைவு பெற்றிருக்கிறது.
    சாந்தினி வரதராஐாவின் ஆக்கங்கள் தொடர்ந்துவர எனது வாழ்த்துக்கள். தாமரா சுப்பிரமணியம்.

    ReplyDelete
  2. றைட்டோ

    சின்ன வயதில் நாம் நடக்கும்போதெல்லாம் நிலாவும் எம்மோடு நடந்து வருவதாய் ஓர் உணர்வில் நிலம் பார்க்காது நிலாவை பரர்த்தபடி நடப்போமே
    அப்படியான ஓர் உணர்வு சாந்தினியின் கதைகளை படிக்கும்போது என்னுள் எழுவதுண்டு தன்னுடைய கதைகளோடு படிப்பவர் மனங்களை கரைத்துவிடும்
    ஆற்றல் இவரது ஒவ்வொரு வரிகளுள்ளும் கனமாய் படிந்திருக்கிறது வளமான வாழ்வின் இனிமையான நினைவுகளை குழந்தைப்பருவத்து பசுமையான
    உணர்வுகளை மனசில் பதியமிட்டு இன்னும் பக்குவமாய் மீட்டிப் பார்க்கும்விதமே அழகான கவிதையாய் மிளிர்கிறது.எழிலான வாழ்வின் வசந்தம்
    தொலைந்து வண்ணமிழந்து எதிலியாகிய ரணங்களை இரத்தம் சுமந்த கணங்களை கண் முன் நிறுத்தி நிலத்திலும் புலத்திலும் இன்னும்
    புலம்பிக்கொண்டே இருக்கும் பல்லாயிரம் மனங்களை நான் சொல்வது ரைட்டோ என வினவுவதான உணர்வு என்னுள். ஆரவாரம் இல்லாத
    யதார்த்தமான கதை. ...,,அல்ல ஒவ்வொரு தமிழ் உள்ளத்துள்ளும் புதைந்து போயுள்ள காயங்களை தொட்டு பார்க்க வைத்த சாந்தினி. வரதராஜன்.
    அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் பாரதி ஜெர்மனி

    ReplyDelete